வெள்ளி, 29 மார்ச் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By

சபரிமலை ஐயப்பனின் பதினெட்டு படிகளின் தத்துவம்....!

சபரிமலை 18 படியிலும், 18 வன தேவதைகள் குடி கொண்டிருக்கின்றனர். 18 தேவதைகளையும் படியில் ஆவாஹணம் செய்து அவர்களை பூஜிப்பது தான்  படிபூஜை. நாம் எடுத்து வைக்கும் ஒவ்வொரு படியும் நம்முடைய வினைகளைக் களையும் வகையில், தீய குணங்களை விட்டு விலக்கி, பிறவிப் பெருங்கடலிருந்து முக்தி அடைய வழிகாட்டுகிறது.
முதல் ஐந்து படிகள் பஞ்சேந்திரியங்கள் என்று சொல்லப்படுகின்ற மெய், வாய், கண், மூக்கு, செவி ஆகியவற்றை குறிப்பிடுகின்றன. அடுத்த எட்டு படிகள்  அதாவது ஆறாவது படி முதல் பதிமூன்றாவது படி வரை அஷ்டராகங்கள் என்று சொல்லப்படுகின்ற காமம், குரோதம், லோபம், மோகம், மதம், மாச்சரியம், அகந்தை, பொறாமை ஆகிய எட்டையும் குறிப்பிடுகின்றன.
 
அடுத்த மூன்று படிகள் அதாவது பதிநான்கு படிமுதல் பதினாறாவது படிவரை முக்குணங்கள் என்று சொல்லப்படுகின்ற சத்துவ குணம், ரஜோ குணம், தமோ  குணம் ஆகிய மூன்றையும் குறிப்பிடுகின்றன. அடுத்த இரண்டு படிகள் அதாவது பதினேழாவது படி மற்றும் பதினெட்டாவது படி ஆகியவை கல்வி, அறியாமை  ஆகியவற்றை குறிப்பிடுகின்றன.
மேலே சொல்லப்பட்டவைகளை ஒருவர் உணர்ந்து புண்ணிய பாவங்களை பிரித்து அறிந்து நடப்பவரால் மட்டுமே பிறவிப் பெருங்கடலிலிருந்து விடுதலை பெற்று முக்தி அடைய முடியும் என்பதை இந்த 18 படிகள் தத்துவ ரீதியாக விளக்குவதாகவும் உள்ளது.