செவ்வாய், 23 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

ராமேஸ்வர கடலில் அலை அடிப்பதில்லை; இதற்கான காரணம் என்ன தெரியுமா....?

ஆடி அமாவாசையில் புனித தீர்த்தங்களில் நீராடுவது வழக்கமென்றாலும், ஆடி அமாவாசையில் ராமேஸ்வர அக்னி தீர்த்தத்தில் நீராடுவது மிகுந்த பலனை தரும் என்கிறது புராணங்கள்.
ராவணன் சீதையை கவர்ந்து சென்று இலங்கையில் சிறை வைத்திருந்தான். ராமன் வானரப்படைகளோடு இலங்கைக்கு சென்று போரிட்டு சீதையை திரும்ப அழைத்து வந்தான். சிலகாலம் அன்னியன் வசம் சீதை இருந்ததால் ஊரார் அவளை தவறாய் பேசிவிடக்கூடாதென, ராமபிரான் சீதையை தீக்குளிக்க ஆணையிட்டான். இதனால் சீதையின் ஆணைக்கிணங்க லட்சுமணனும் தீமுட்டி அக்னி குண்டம் தயார்  செய்தான்.
 
தீ ஜூவாலை கொழுந்து விட்டு எரிந்தது. அதன் முன்பாக வந்து நின்ற சீதை, “அக்னி தேவனே! நான் உனக்குள் இறங்குகிறேன். நான்  கற்பிழந்திருந்தால், என்னை பொசுக்கிவிடு எனக்கூறியபடியே அக்னி குண்டத்திற்குள் இறங்கினாள். சீதையின் கற்பின் வெம்மை  அக்னிதேவனை சுட்டெரித்தது.
 
சீதை பரிசுத்தமானவள். இவளை சுட்டுப்பொசுக்க என்னால் இயலாது என்று கூறியபடியே, சீதையை கையில் ஏந்தி ராமனிடம் ஒப்படைத்துவிட்டு, தன் வெம்மையை தீர்க்க, அருகிலிருந்த ராமேஸ்வரக்கடலில் குதித்தான். அக்னிதேவன் கடலுக்குள் இறங்கியதால்  ராமேஸ்வரக்கடல் தண்ணீர் கொதிக்க ஆரம்பித்து, கடல்வாழ் உயிரினங்கள் துடித்தன. கடலரசன் அலறினான். சீதையை அனைவரும்  தஞ்சமடைய, அக்னிதேவனின் சூட்டை தணித்து கடலரசனை சாந்தப்படுத்தி, அனைத்து உயிரினங்களையும் சீதாதேவி காப்பாற்றினாள். 
 
சீதையை பணிந்து நின்ற அக்னிதேவனை, ஆசிர்வதித்த சீதை, இன்றிலிருந்து இந்த தீர்த்தம் அக்னி தீர்த்தம் என்ற உமது பெயரால் அழைக்கப்படும். மற்ற கடல்களைப்போல் சீற்றம் கொள்ளாமல் பூமாதேவியின் மகளான என்னைப்போல் சாந்தமாய் விளங்கும் என  கடலரசனுக்கும் அருளினாள்.

இந்த அக்னி தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் போகும் எனவும் அருளினாள். அன்றிலிருந்து   ராமேஸ்வர கடலில் அலை அடிப்பதில்லை. அக்னி தீர்த்தம் அழைக்கப்படும் புண்ணிய தீர்த்தத்தில் நீராடுபவர்களின் பாவங்கள் போக்கப்பட்டு  புண்ணிய ஆத்மாக்களாக மாற்றப்படுகின்றனர்.