1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
  4. Methods and benefits of Varalakshmi fasting !!

வரலக்ஷ்மி விரதம் மேற்கொள்ள வேண்டிய முறைகளும் பலன்களும் !!

வரலட்சுமி விரதம்
வரலக்ஷ்மி விரதம் அன்று வீட்டினை சுத்தம் செய்து, பூஜை அரை முதலியவற்றை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். பின் வீட்டில் மாவிலை, தோரணம் கட்ட வேண்டும்.

பூஜை அறையில் அம்பிகைக்கு மண்டபம் இருந்தால் அதை அலங்கரித்து வைக்க வேண்டும். இல்லை என்றால் ஒரு மனையின் மீது அம்பிகையை அமரச் செய்ய வேண்டும்.
 
பூஜையை ஆரம்பிப்பதற்கு முன் விநாயகரை வழிபட வேண்டும். அதற்க்கு ஒரு வெற்றிலையை எடுத்து அதில் மஞ்சளால் பிள்ளையார் பிடித்து வைத்து அதற்க்கு குங்குமம் வைத்து, விநாயகருக்கு பிடித்த அருகம்புல் வைத்து அவரை வழிபட வேண்டும்.
 
பின்னர் ஒரு மனையில் அரிசி மாவினால் கோலமிட்டு அதில் ஒரு வாழை இலையை வைக்க வேண்டும். வாழை இலையில் அரிசியினை நன்கு பரப்பி வைக்க வேண்டும். பின் அதில் ஒரு கலச செம்பினை வைத்து அதற்க்கு மஞ்சள், குங்குமம், வைத்து அதை சுற்றி மாவிலையை கட்ட வேண்டும். அந்த கலசத்தின் மீது தேங்காய் வைக்க வேண்டும்.
 
தேங்காயில் மஞ்சள் பூசி குங்குமம் வைத்து பூ வைத்து அதன் மீது அம்பிகையை வைக்க வேண்டும். வரலக்ஷ்மி வீரத்திற்கு முதல் நாள் அம்மனை அலங்காரம் செய்து வாசலில் வைத்து வழிபட்டு அம்மனை உள்ளே அழைக்க வேண்டும். பின் அனைத்து செல்வங்களையும் தந்து அருள் புரிவாயாக என்று வேண்டிக் கொண்டு அம்மனை உள்ளே அழைத்து வந்து பின் அம்மனுக்கு பிடித்தமானவற்றை செய்து வைத்து நெய்வேத்தியம் செய்ய வேண்டும்.
 
கலசத்தில் நோன்பு கயிறு, தாலி சரடை வைத்து பூஜிக்க வேண்டும். பூஜை முடிந்த பின்பு தாலி சரடை கணவரிடமோ அல்லது வீட்டில் இருக்கும் மூத்த சுமங்கலிகளிடம் கொடுத்து கட்டிக் கொள்ள வேண்டும்.
 
வரலக்ஷ்மி விரதத்திற்கு உறவினர்கள், நண்பர்கள் என அனைவரையும் பூஜைக்கு அழைக்க வேண்டும். அப்போது தான் வரலக்ஷ்மி விரத வழிபாட்டின் முழு பலனையும் அடைய முடியும். பூஜைக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தாம்பூலம் கட்டாயம் கொடுக்க வேண்டும்.
 
வெற்றிலை பாக்கு, வாழைப்பழம், மஞ்சள்,  குங்குமம், பூ,  தாலிச் சரடு,  வளையல்  கொடுத்து அவர்களுக்கு பிரசாதம் கொடுத்து மகிழ்ச்சியோடு அனுப்ப வேண்டும். இவ்வாறு இவ்விரதத்தை உள்ளன்போடு செய்து வழிபட்டால் அம்பிகையின் அருள் என்றும் உங்கள் வீட்டில் பரிபூரணமாக நிறைந்திருக்கும்.
About Writer
Sasikala
அடுத்த கட்டுரையில்
ஒவ்வொரு பிரதோஷத்துக்கும் உண்டான சிறப்புகளும் பலன்களும் !!