செவ்வாய், 16 ஏப்ரல் 2024
  1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

மார்கழி மாதத்தின் சிறப்புக்களை பற்றி தெரிந்துக்கொள்வோம் !!

'மாதங்களில் நான் மார்கழியாக இருக்கிறேன்' என ஶ்ரீகிருஷ்ணர் கீதையில் கூறியிருக்கிறார். மார்கழி மாதம் பீடுடைய மாதமாகும். (பீடு = பெருமை) இம் மாதம் தேவர்களுக்கான அதிகாலை பொழுதாகும்.  

மனிதர்களுக்கு ஒரு வருடம் என்பது தேவர்களுக்கு ஒரு நாள் என்பர். தை மாதத்திலிருந்து ஆனி மாதம் வரை  உத்ராயண புண்ணிய காலமாகும்.  அதாவது  தேவர்கள் விழித்திருக்கும் காலம்.  எனவே  மார்கழி என்பது தேவர்களுக்கு வைகறை பொழுதைப் போன்றது. மிகவும்  சிறப்புடைய மாதம் மார்கழி. எனவே இந்த மாதம் முழுவதும் இறைவழிபாட்டிற்கு  உகந்தது. 
 
தமிழ் வருடத்தின் ஒன்பதாவது மாதமான மார்கழியைத்  'தனுர் மாதம்" எனவும்  அழைப்பர். இம்மாதத்தில் அதிகாலையில் எழுந்து குளிர்ந்த நீரில் குளித்துவிட்டு வாசலில் வண்ணக்கோலம் இட்டு இறைவழிபாடு செய்வது  மக்களின் வழக்கம். ஓசோன் படலமானது பூமிக்கு மிகஅருகில் இம்மாதத்தில் உள்ளது. எனவே  சுத்தமான காற்றை சுவாசித்து உடல்நலனைப் பேணும் பொருட்டு அதிகாலை வழிபாட்டைப்  பக்தர்கள்  இம்மாதத்தில்   மேற்கொள்ளுகின்றனர். 
 
இம்மாதத்தில் மேற்கொள்ளப்படும் அதிகாலை இறைவழிபாடு பற்றி மாணிக்க வாசகர் திருவெம்பாவையிலும், ஆண்டாள் நாச்சியார் திருப்பாவையிலும்  போற்றியுள்ளனர்.
 
மார்கழியில் அதிகாலை வழிபாட்டில் கோவில்களில்  திருப்பாவை, திருவெம்பாவை, திருப்பள்ளியெழுச்சி, ஆழ்வார் பாசுரங்கள் பாடப்படுகின்றன. இம்மாதத்தில்  மிருகசீரிட நட்சத்திரத்தில் 'என்றும் பதினாறு  வயது'   எனச் சிவபெருமானிடமிருந்து வரத்தைப் பெற்ற  மார்க்கண்டேயர் பிறந்தார். எனவே மரணத்தை வெல்லும் மாதம் மார்கழி என்று மார்க்கண்டேய புராணம் குறிப்பிடுகிறது. மிருத்யுஞ்ச ஹோமம் (யமனைவெல்லும் வேள்வி) செய்ய இம்மாதம் சிறந்தது.
 
மார்கழி  மாதத்தில் ஆருத்ரா தரிசனம், வைகுண்ட ஏகாதசி, அனும ஜெயந்தி, பாவை நோன்பு, திருவெம்பாவை நோன்பு, படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம்,  உற்பத்தி ஏகாதசி போன்ற விழாக்கள், பண்டிகைகள், விரதமுறைகள் பின்பற்றப்படுகின்றன.