1. ஆன்மிகம்
  2. ஜோ‌திட‌ம்
  3. ‌சிற‌ப்பு‌ பல‌ன்க‌ள்
Written By Sasikala

முருகப்பெருமானின் கொடியாகவும் வாகனமாகவும் மாறிய சூரபத்மன் எவ்வாறு...?

முருகப்பெருமானுக்கு அன்னை பார்வதி தன் சக்தி மிகுந்த வேலை கொடுக்க, சூரபத்மனுக்கு எதிரான போருக்கு புறப்பட்டார். திருச்செந்தூரில் தன் படை பாசறையை அமைத்தார். 

பார்வதி தேவியின் பாத சிலம்பில் இருந்து தோன்றிய நவசக்தியர்களிடம் இருந்து நவ வீரர்களான வீரபாகுதேவர், வீரகேசரி, வீர மகேந்திரர், வீர மகேசுவரர், வீர புரந்தரர், வீரா க்கதர், வீர மார்த்தாண்டர், வீராந்தகர், வீர தீரர் மற்றும் லட்சம் வீரர்களும் தோன்றி முருகனின் படைத் தளபதிகளாக விளங்கினர். 
 
சூரபதுமனையும் அவனுடன் சேர்ந்த அசுரர்களையும் அழித்து தேவேந்திரனுக்கு பட்டாபிஷேகம் செய்து தர்மத்தை நிலைநாட்ட புறப்படுவாயாக என்று கந்தனுக்கு, சிவபெருமான் அன்பு கட்டளையிட்டார்.
 
தேவசேனாபதியின் பெரும்படை செல்லும் வழியில் கிரவுஞ்சமலை எதிர்பட்டது. அந்த மலைக்கு அதிபதியான சூரபத்மனின் தம்பியாகிய தாரகாசூரனை சம்ஹாரம் செய் து அவன் மார்பில் அணிந்திருந்த திருமாலின் சக்ராயுதமாகிய செம்பொன் பதக்கத்தை முருகன் பெற்றார்.
 
முருக பெருமானின் படைகள் ஆரவாரத்துடன் புறப்பட்டனர். சூரபத்மன் மகன் பானுகோபன் புறப்பட்டு வந்து முருகப்பெருமான் படையோடு போரிட்டு படுதோல்வி அடைந்து புறமுதுகு காட்டி ஓடினான். 3ஆம் நாள் போரில் பானுகோபன் கொல்லப்பட்டான். அடுத்து சிங்கமுகா சூரன் சிங்கமென சீறிப் பாய்ந்து போர்க்களம் வந்தான். ஆனால் முருகபெருமானின் வேல், சிங்கமுகாசூரனை சம்ஹாரம் செய்து அவனும் கொல்லப்பட்டான். அடுத்து சூரபத்மனின் தலைமை அமைச்சர் தருமகோபன், சூரபத்மன் மக்கள் மூவாயிரம் பேரும் கொல்லப்பட்டனர். முடிவில் எஞ்சி நின்றது சூரபதுமன் மட்டுமே.
 
சூரசம்ஹாரம்: பெரும் படையுடன் சூரபத்மன் போருக்கு வந்தான். மிக அற்புதமாக மாயப்போர் புரிந்தான். முருகனது வேலில் இருந்து தப்பிக்க மிருகங்கள், பறவைகள், மரங்கள் என மாறி மாறி மாயத்தால் தப்பினான். முருகனின் சக்தி வேல் திருச்செந்தூர் அருகே உள்ள மரப்பாடு என்ற மாந்தோப்பில் மாமரமாக மறைந்திருந்த சூரபத்மனை இருகூறாக பிளந்து சம்ஹாரம் செய்தது. சூரபதுமன் ஆணவம், அகங்காரம் ஒழிந்தது. இரண்டும் சேவலாகவும், மயிலாகவும் மாறி முருகப்பெருமான் கொடியாகவும் வாகனமாகவும் மாறியது.