1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 12 ஏப்ரல் 2022 (08:00 IST)

சித்திரை முதல் நாள்.. வீடுகளில் செய்யப்படும் பூஜைகளும் உணவுகளும்....!!

சித்திரை முதல் நாளன்று வீட்டை நன்றாக கூட்டி தூய்மை செய்ய வேண்டும். வாசலில் கோலமிட்டு அழகுபடுத்த வேண்டும். 

 
வாயிற்படிகளுக்கு மஞ்சள் குங்குமம் இட்டு, மாவிலைத் தோரணங்களை கட்டி மங்கலம் சேர்க்க வேண்டும். வாயிற்படி நிலைவாயிலில் மஞ்சள் பூசி, சாணத்தால் மெழுகி, அழகிய மாக்கோலமிட்டால்  திருமகள் வாசம் செய்வாள் என்பது நம்பிக்கையாகும்.
 
அத்தோடு மஞ்சள், குங்குமம் ஆகியவை நோய்க்கிருமிகளும் துஷ்ட தேவதைகளும் வாசல்படியை தாண்டி வராமல் தடுக்கும் சக்திகளாகும். புதுவருட தினத்தில் நம்  நலம் காக்கவே இந்நடைமுறை வழக்கத்துக்கு வந்தது.
 
சித்திரை புதுவருடமன்று நம் வருங்கால பலன்களை அறிவது அவசியம். புத்தாண்டு பஞ்சாங்கம் வாங்கி அதற்கு சந்தனம், குங்குமம் ஆகியன இட்டு, பூஜையில்  வைத்து பூஜிக்க வேண்டும்.
 
அறுசுவை உணவு
சித்திரை மாதத்தில் சூரியன் மேஷ ராசியில் மிகவும் உச்சமாக பிரகாசிப்பதால் அன்றைய தினம் பானகம், நீர் மோர், பருப்புவடை ஆகியவற்றை நைவேத்தியம் செய்யவேண்டும். இனிப்பு, கசப்பு, உவர்ப்பு, புளிப்பு, துவர்ப்பு, கார்ப்பு என அறுசுவை கொண்ட உணவுகளை சமைத்து உண்பர்.
 
மதிய உணவில் வேப்பம்பூ பச்சடி, மாங்காய்ப் பச்சடி, பருப்பு வடை, நீர்மோர், பருப்பு, பாயாசம், மெதுவடை போன்றன இடம்பெறுதல் அவசியம். விருந்தினர் வருகையும் விருந்தோம்பலும் நம் பாரம்பரியமாக மாறியது.
 
சித்திரை முதல் நாளன்று பெருவாரியாக மக்கள் கோயில்களுக்கு சென்றும் வாழ்த்துக்களை பரிமாறிக் கொண்டும் மற்றும் பல வகைகளிலும் வருடப் பிறப்பை சிறப்பாக கொண்டாடுவர்.