1. ஆன்மிகம்
  2. ஆன்மிகம்
  3. செய்திகள்
  4. A refreshing trek for body and mind!

உடலுக்கும் மனதிற்கும் புத்துணர்வு அளிக்கும் மலையேற்றம்!

adiyogi
தொன்மையான இந்திய கலாச்சாரத்தில் மனிதனின் உள்நிலை வளர்ச்சிக்கான மூலாதாரங்களாக இருப்பவை கோயில்கள். ஊர்முழுக்க ஆங்காங்கே கோயில்கள், ஒவ்வொரு வீதியிலும் பல கோயில்கள் என இங்குள்ள மனிதர்களின் வாழ்க்கை கோயில்களை அடிப்படையாகக் கொண்டே நடந்து கொண்டிருக்கிறது.


 
வீட்டில் நடக்கும் சம்பிரதாயங்களான குழந்தை பிறப்பு, திருமணங்கள், பெண்களுக்குரிய சீர் சடங்குகள், அந்தந்த காலத்திற்குரிய விசேஷங்கள், கொண்டாட்டங்கள் அனைத்துமே கோயில்களில் தான். அவர்களுக்கு பிடித்தமான கோயில் அல்லது அதற்குரிய கோயில் அல்லது குல தெய்வக் கோயில் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் கோயில்களைச் சுற்றியே சுழல்கிறது இந்த மண்ணின் மனிதர்களுடைய வாழ்க்கை.

மேற்கத்திய நாடுகளில் வாழ்வாதாரம், பிழைத்தல் பற்றியே கவனம் இருக்கும் போது, இந்த பாரத மண்ணின் எளிமையான மனிதர்கள் கூட அவர்களின் அன்றாட வாழ்க்கையில் ஆன்மீகம், முக்தி, பாவ புண்ணியங்கள் ஆகியவற்றை புரிந்து வாழும் தன்மையோடு இருப்பதை காணமுடியும். இவற்றிலெல்லாம் ஆழமான அறிவோடு இல்லாவிட்டாலும் அடிப்படையில் இவற்றை புரிந்தும் புரியாமலும் கூட அனைவரும் பின்பற்றியே வருகிறார்கள். அதில் முக்கியமான பகுதி தான் கோயிலுக்கு செல்வது.

தினமும் பிழைப்பிற்காக வேலையோ தொழிலோ செய்யத் துவங்கும் முன் கோயிலுக்கு சென்று வந்த பிறகே அன்றைய நாளைத் துவங்குவது இந்த மரபில் ஊறிய ஒன்று. காலப்போக்கில் வாரம் ஒருமுறை மாதம் ஒரு முறை என மாறினாலும் எப்படியோ ஒரு வழியில் கோயிலுக்கு செல்வது தொடர்கிறது.

வருடாவருடம் அந்தந்த வழிபாட்டுக்கு உரிய காலங்களில் தனித்துவமான திருத்தலங்களுக்கு செல்வதை மாலையிட்டு மிகுந்த பக்தி சிரத்தையோடு செய்கின்றனர் பக்தர்கள். தினசரி வாழ்க்கைமுறையை முறைப்படுத்தி, அதாவது உணவுமுறை, உடை, உடல் மன ஒழுக்கமுறைகளை கடைப்பிடித்து, அனைத்தையும் கொஞ்சம் சீர்படுத்திக்கொண்டு, பல நாட்கள் விரதமிருந்து மலைக் கோயில்களுக்கு யாத்திரையாக சென்று வருகின்றனர்.

சபரிமலை, பழனி மலை, சதுரகிரி, வெள்ளியங்கிரி உள்ளிட்ட பல திருத்தலங்கள் தமிழகத்தில் உள்ளன. ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தனித்துவமான சிறப்பு உள்ளது. குறிப்பாக சதுரகிரி, வெள்ளியங்கிரி ஆகிய மலையேற்றங்கள் சவாலானவை. அதற்காகவே நமது உடலை தயாராக வைத்திருந்தால் மட்டுமே இந்த அருள்பொழியும் மலைத்தலங்களுக்கு சென்றுவர இயலும். எப்போதும் மலையேற்றங்கள் செல்பவர்களுக்கு கூட இந்த மலை ஏறுவது சற்று கடினமே. ஆனால் மலை ஏறி இறங்கியபிறகு, அடுத்து எப்போது மலை ஏறுவோம் என்று எங்கும் அளவிற்கு வாழ்க்கையின் சிறந்த அனுபவமாக இருக்கும்.

இத்தகைய வழிபாட்டு முறைகள் நமது உடல் மன வலிமையை பரிசோதிக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. 'ஒரு மலை ஏறிப்பார்த்தால்தான் நாம் நமது உடலுக்கு செய்திருக்கும் துரோகங்கள் என்னென்ன என்பது தெரியும்' என்று சொல்வார்கள். அப்படி உடலின் ஒவ்வொரு பாகத்தையும் முழு செயல்பாட்டுக்கு உட்படுத்தி உடலுக்கு நிகழும் புத்துணர்வு பயிற்சிதான் மலையேற்றம்.

இதனை சற்று எளிமைப்படுத்தி ஆன்மீக அனுபத்தை உணர வழிசெய்கிறது தென் கைலாய பக்திப்பேரவை. ஒவ்வொரு மாத சிவராத்திரிக்கும் தென் கைலாய பக்திப்பேரவை நடத்தும் இந்த சிவாங்கா யாத்திரையில் கலந்துகொள்ள பக்தர்கள் 42 நாட்களுக்கு முன்பே பதிவு செய்துகொண்டு தங்கள் விரதத்தை துவக்குகின்றனர். இருவேளை உணவு, சிவநமஸ்காரம் எனும் யோகப்பயிற்சி, உள்ளிட்ட செயல்முறைகளோடு மிகத் தீவிரமான பக்தியில் இருக்கின்றனர்.

சலிப்பான வாழ்க்கையிலிருந்து பாதையை மாற்றி நமது உள்நிலையை கவனித்தால்தான் புறச்சூழலும் நன்றாக அமையும் என்பதை உணர்ந்த பலரும் இந்த சிவாங்கா விரதத்தை மேற்கொண்டு, அளப்பரிய பலன்களை பெறுகிறார்கள். பல நாட்களாக இருந்த உடல் உபாதைகள், குடும்ப வாழ்வின் குழப்பங்கள், பொருளாதாரம் என எல்லாமே நமக்கு வேண்டியதைப்போல கிடைத்தன என்று பலரும் பகிர்ந்துகொள்கிறார்கள். அதனை உணர்ந்து அனுபவித்த அவர்கள் ஒவ்வொரு வருடமும் திரும்பத் திரும்ப சிவாங்கா யாத்திரை வருவதைப் பார்ப்பதே சிலிர்ப்பானதொரு பக்தி அனுபவமாக இருக்கிறது.

 
சிவாங்கா யாத்திரை குறித்த கூடுதல் தகவல்களுக்கு +9183000 83111 என்ற எண்ணையும், [email protected] என்கிற மின்னஞ்சலையும் தொடர்பு கொள்ளலாம்
About Writer
Prasanth Karthick
அடுத்த கட்டுரையில்
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் மாசிமக பெருவிழா கோலாகலம்..! பக்தர்களுக்கு அருள் பாலித்த உற்சவர்..!!