1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: ஞாயிறு, 18 பிப்ரவரி 2024 (09:17 IST)

11,000 ராணுவ வீரர்களுக்கு பாரம்பரிய ஹத யோகப் பயிற்சிகளை அளித்த ஈஷா! - நிறைவு விழாவில் சத்குரு பங்கேற்றார்!

satguru
இந்திய ராணுவ வீரர்களுக்காக ஈஷாவுடன் இணைந்து நடத்தப்படும் “மனஅழுத்த மேலாண்மை மற்றும் முழுமையான ஆரோக்கியத்திற்கான யோகா" என்ற நிகழ்ச்சியில் 11,000 ராணுவ வீரர்கள் பங்கேற்று பயன்பெற்றனர். இதன் நிறைவு விழா பிப் 16 (வெள்ளிக்கிழமை) அன்று புனேயில் நடைபெற்றது.


 
புனே மில்கா சிங் விளையாட்டு வளாகத்தில் நடைபெற்ற இவ்விழாவில், ஈஷா அறக்கட்டளையின் நிறுவனர் சத்குரு மற்றும் இந்திய ராணுவத்தின் தெற்கு தலைமையகத்தின் உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார் சிங் ஆகியோர் பங்கேற்றனர். இதில் 10,000 ராணுவ வீரர்கள்,  அவர்களின் குடும்பதினருடன் கலந்து கொண்டனர். மேலும் தெற்கு தலைமையகத்தின் மூலம் செய்யபட்ட நேரடி ஒளிபரப்பில் 40,000 வீரர்கள் கலந்து கொண்டனர்.

இந்திய ராணுவத்தின் தெற்கு தலைமையகம், ஈஷா அறக்கட்டளையுடன் இணைந்து 9 மாநிலங்களில் உள்ள 23 இடங்களில், 11,000-க்கும் மேற்பட்ட ராணுவ வீரர்களுக்கு ஒரு வார கால பாரம்பரிய ஹத யோகா பயிற்சியை ஈஷா ஹத யோகா ஆசிரியர்கள் மூலம் நடத்தியது.

இதன் நிறைவு விழாவில் திரண்ட திரளான கூட்டத்தில் உரையாற்றிய சத்குரு, “இந்திய ராணுவ படைகளுக்கு  ஏதோ ஒரு வகையில் பயனுள்ளதாக இருந்ததில், எனக்கும், எங்கள் ஆசிரியர்கள் அனைவருக்கும் பெருமிதமாக இருக்கிறது" என்று கூறினார்.

மேலும், தெற்கு தலைமையகத்தின் உயர் அதிகாரி லெப்டினன்ட் ஜெனரல் அஜய் குமார் சிங் யோகாவின் நன்மைகளை பற்றியும், 10,000 வீரர்களுக்கு ஹத யோகா பயிற்சியை கற்றுக் கொடுக்க விரும்பிய நோக்கத்தை அடைந்ததற்கான தனது பாராட்டுகளையும் தெரிவித்தார்.

77-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஈஷா அறக்கட்டளை, இந்திய ராணுவத்தின் தெற்கு தலைமையகத்தோடு இணைந்து கடந்த ஆண்டு இத்திட்டத்தை துவக்கியது. இந்த கூட்டு முயற்சி சவாலான சூழல்களில் அதிக மன அழுத்தத்திற்கு உள்ளாகும் வீரர்களுக்கு முழுமையான ஆரோக்கியத்தைக் கொண்டுவருவதை நோக்கமாக கொண்டுள்ளது.

கோவை ஈஷா யோகா மையத்தில் தீவிர 21 வார ஹத யோகா ஆசிரியர் பயிற்சி திட்டத்தை முடித்த 56 ஈஷா ஹத யோகா ஆசிரியர்கள் சூரிய கிரியா மற்றும் அங்கமர்தனா போன்ற பாரம்பரிய ஹத யோகப்  பயிற்சிகளை ராணுவ வீரர்களுக்குக் கற்றுக் கொடுத்தனர். ஜெய்சல்மர், ஜான்சி, குவாலியர், ஜாம்நகர், புனே, செகந்திராபாத், பெங்களூரு, கோயம்புத்தூர் மற்றும் கண்ணூர் உள்ளிட்ட 22 நகரங்களில், 127 வகுப்புகள் மூலம் 9 இந்திய மாநிலங்களில் நூற்றுக்கணக்கான ஈஷா தன்னார்வலர்கள் மூலம் பயிற்சி நடத்தப்பட்டது.

ஹதயோகப் பயிற்சியை முடித்த வீரர்களில் ஒருவர், “இந்த யோக பயிற்சியால் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன், முதல் நாளில், என் உடலில் நெகிழ்வுத்தன்மை மிகவும் குறைவாக இருந்தது, ஆனால் இப்போது உடலில் ஒரு மாற்றத்தை உணர்கிறேன். ஒரு ராணுவ வீரரின் தினசரி வாழ்வில் மன அழுதத்தைக் குறைக்க இப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக இருக்கும். நான் அதை என் வாழ்க்கையில் தினசரி செய்வேன் என்று நம்புகிறேன். எங்களுக்காக இந்த நிகழ்ச்சிகளை நடத்தியதற்கு நன்றி” என்றார்.

மகாராஷ்டிரா ஹெச்டிஎஃப்சி வங்கி கிளைத் தலைவர் அபிஷேக் தேஷ்முக் பேசுகையில் “எச்டிஎஃப்சி பேங்க் பரிவர்தன் – ஈஷாவுடன்” இணைந்து ராணுவ வீரர்களுக்கு நல்வாழ்வுக்கான கருவிகளை வழங்கி வருகிறது. “HDFC -இன் பரிவர்தன் முயற்சிகள் மூலம், சமூகத்தில் அர்த்தமுள்ள தாக்கத்தை ஏற்படுத்துவதே எங்கள் நோக்கம். ஈஷா யோகா பயிற்சிகளால் நான் தனிப்பட்ட முறையில் பலன் அடைந்துள்ளேன். மேலும் நமது துணிச்சலான வீரர்களின் நல்வாழ்வுக்கான பங்களிப்பாளராக இருந்ததில் நான் மிகவும் திருப்திகரமாக உணர்கிறேன்,” என்று கூறினார்.

ஈஷாவால் வழங்கபட்ட யோக பயிற்சிகளுக்கு ராணுவ வீரர்கள் மத்தியில் கிடைத்த அமோக வரவேற்புக்கு பின், இந்திய ராணுவம் மற்ற தலைமையகங்களிலும் இதே போன்ற பயிற்சி நிகழ்ச்சிகளை நடத்துமாறு ஈஷாவிடம் கேட்டுக் கொண்டது. தற்போது, ஈஷா இந்திய ராணுவத்தின் மத்திய தலைமையகமான லக்னோ மற்றும் கிழக்குக் தலைமையகமான கொல்கத்தா ஆகிய இடங்களில் ஹத யோக நிகழ்ச்சிகளை நடத்தத் தொடங்கியுள்ளது. இதன் மூலம் மார்ச் 2024-க்குள் 2,000 வீரர்களுக்கு ஹத யோக பயிற்சிகளை அளிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.