வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 12 மார்ச் 2019 (16:05 IST)

எப்போதும் உன்கூடவே இருப்போம் – ஒரு தாயின் நம்பிக்கை வார்த்தைகள்

பொள்ளாச்சி சம்பவம் தமிழகம் முழுவதும் பல விவாதங்களை உருவாக்கியுள்ளது. இதுகுறித்து கோவையைச் சேர்ந்த பெண் ஒருவரின் முகநூல் பதிவு பெண்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

பொள்ளாச்சியில் கடந்த 7 ஆண்டுகளாக நடந்ததாகக் கூறப்படும் பாலியல் அத்துமீறல்கள் தொடர்பான விவகாரம் தமிழகம் முழுவதும் கொந்தளிப்புகளை ஏற்படுத்தியுள்ளது. இது சம்மந்தமாக போலிஸ் வசந்தகுமார், செந்தில், சதீஷ், பார் நாகராஜன் ஆகியோரைக் கைது செய்ததாகவும், அதில் பார் நாகராஜன் என்பவர்  பொள்ளாச்சி 34 வார்டு அம்மா பேரவைச் செயலாளராக இருப்பதால் அவரை மட்டும் போலிஸார் விடுவித்து விட்டதாகக் கூறப்படுகிறது. இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட திருநாவுக்கரசு என்ற மற்றொருக் குற்றவாளியும் மார்ச் 5ஆம் தேதியன்று கைது செய்யப்பட்டார்.

இந்த சம்பவத்தில் 100க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள் என செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் முதலில் பாதிக்கப்பட்ட பெண் தனக்கு நேர்ந்த கொடுமையை வெளி உலகத்திற்கு தெரியப்படுத்தியிருந்தால் இத்தனைப் பேர் பாதிக்கப்பட்டு இருக்கமாட்டார்கள். ஆனால் அந்தப் பெண்ணை வெளியே சொல்லவிடாமல் எது தடுத்தது என்ற கேள்வி எழுகிறது. அதற்கு இந்த சமூகம்தான் காரணம்.

அந்தப் பெண்ணிற்கு அதை தன் பெற்றோரிடம், தன் சகோதரர்களிடம், காவல்துறையிடம் சொல்வதற்கான வாய்ப்புகளை இந்த சமூகம் வழங்கியுள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது. அப்படியே சொன்னாலும் ’ஏன் அவனை நம்பி நீ போனாய் ?... உனக்கு இது தேவைதான் போன்ற கேள்விகளையே அந்த பெண் எதிர்கொள்ள நேர்ந்திருக்கும். இது போன்ற கேள்விகளுக்குப் பயந்தே பல பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்டதை வெளியே சொல்ல முன்வர மறுக்கிறார்கள். இது சம்மந்தமாக கோவையைச் சேர்ந்த பெண் ஒருவர் பதிவு ஒன்று அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

பொள்ளாச்சி சம்பவத்திற்குப் பிறகு அந்த பெண்ணை அழைத்த தாய் கூறிய நம்பிக்கை அளிக்கக் கூடிய வார்த்தைகளை அவர் அந்த பதிவில் பகிர்ந்தூள்ளார். அவரின் பதிவு :-

‘கோயம்பத்தூரை சேர்ந்த நான், பொள்ளாச்சியில் நடந்த பாலியல் கொடூர சம்பவத்துக்கு பிறகு, வழக்கமாக வீட்டில் இருந்து வரும் போன்காலில் பத்தரமா இருந்துக்கோமா, ஆண் நண்பர்களோடு வெளிய போகதே, இதுபோன்ற அறிவுரைகள் வரும் என எதிர் பார்த்தேன்’.
ஆனால் எனக்கு போன் செய்த எனது அம்மா, ‘எனக்கு தெரியும் நீ தைரியமானவள் என்று. என்ன நடந்தாலும் அம்மாவும், அப்பாவும் உன் கூடவே இருப்போம். எதாவது போட்டோவே அல்லது வீடியோ வைத்து உன்னை மிரட்டினால் அதைக் கண்டுப் பயப்படாதே. இதை நாம் தைரியமாக எதிர்கொள்வோம். ஏனெனில், இந்த உலகத்திலுள்ள எல்லா பெண்களுக்கும் இருப்பதுபோன்ற வெறும் உடல்தான் இது. இதற்காக வெட்கப்பட ஏதுமில்லை. எது நடந்தாலும் ஒரு பெற்றோராய் எப்போதும் உன் கூடவே இருப்போம்’.


‘என் அம்மா சொன்ன இந்த வார்த்தைகளை கேட்டவுடன் அம்மாவைக் கட்டிப்பிடித்து அழவேண்டும் என தோன்றியது. என்ன நடந்தாலும் பெண்கள் தைரியமாக இருக்க வேண்டும். பெற்றோர்கள்தான் பிள்ளைகளுக்கு பக்கபலமாக இருக்க வேண்டும். பெற்றோரைவிட வலிமையான ஒன்று இருந்துவிடமுடியாது.

இதுபோல ஒவ்வொரு பெற்றோரும் தங்கள் பெண்களுக்கு ஆதரவாக இருக்கும் பட்சத்தில் பெண்கள் கண்டிப்பாக தங்களுக்கு நடக்கும் அநியாயங்களை தைரியமாக வெளியுலகத்திற்குக் கொண்டு வருவார்கள் என்பதில் சந்தேகமில்லை.