1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 18 ஜூன் 2022 (15:39 IST)

“பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்பட மாட்டேன்” முன்னாள் அதிமுக அமைச்சர் ஜெயக்குமார் பேச்சு!

அதிமுகவின் பொதுக்குழு கூட்டம் வரும் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட வேண்டிய முடிவுகள் குறித்த ஆலோசனைக் கூட்டம் சென்னையிலுள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த கூட்டம் கட்சிக்குள்ளேயே இருக்கும் இருதரப்பினரின் கருத்து வேறுபாட்டால் அமளியில் முடிந்தது.

அதிமுகவை பொறுத்தவரை கட்சிக்கு ஒற்றைத் தலைமை யார் என்பதுதான் இப்போதுள்ள மில்லியன் டாலர் கேள்வி. தலைமை பொறுப்பை ஏற்க ஓபிஎஸ் மற்றும் ஈபிஎஸ் என இரண்டு தரப்பும் முனைப்பில் உள்ளனர். இது சம்மந்தமாக இரு தரப்பினரின் கோஷங்களால் சலசலப்பு உருவானது. அதற்கான பதிலை, பேசித் தீர்க்க சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் இன்றைய தீர்மானக் கூட்டம் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த பரபரப்பான சூழலுக்கு மத்தியில் இன்று பெரம்பூர் பகுதியின் நிர்வாகிகளில் ஒருவரான மாரிமுத்து ஒரு தரப்பினரால் தாக்கப்பட்டுள்ளார். சட்டையில் ரத்தக்கறைகளுடன் அலுவலகத்தின் வெளியே வந்த ஊடகங்களிடம் பேசியபோது "எடப்பாடி ஆளானு கேட்டு அடிக்கிறாங்க" என்று தெரிவித்திருந்தார். இவர் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரோடு வந்தவர் என்று சொல்லப்படுகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களை ஜெயக்குமார் சந்தித்த போது அவரிடம் “உங்கள் மேல் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதா சொல்லப்படுகிறதே?” என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர் சிரித்துக்கொண்டே “இந்த பூச்சாண்டிக்கு எல்லாம் நான் பயப்படமாட்டேன்” எனக் கூறி சென்றார்.