வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By லெனின் அகத்தியநாடன்
Last Modified: செவ்வாய், 22 நவம்பர் 2016 (15:10 IST)

காதலியை கர்ப்பமாக்கி வேறொருவரை திருமணம் செய்ய முயன்ற வாலிபர்

காதலித்த பெண்ணை கர்ப்பமாக்கிவிட்டு, வேறொரு பெண்ணை திருமணம் செய்ய முயன்ற வாலிபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.


 

திருவண்ணாமலை மாவட்டம் போளூரை அடுத்த சேத்துப்பட்டை சேர்ந்த விவேக் (27). விவேக் அந்த பகுதியில் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அதே பகுதியை சேர்ந்தவர் தாட்சாயினி (23). இவர், காஞ்சீபுரம் மாவட்டம் உத்திரமேரூரில் உள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார்.

இருவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் அது காதலாக மாறியுள்ளது. விவேக், தாட்சாயினியை திருமணம் செய்து கொள்வதாக ஆசைவார்த்தை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். அதில் அவர் கர்ப்பம் ஆனார்.

இதனையடுத்து விவேக், தாட்சாயினியிடம் கர்ப்பத்தை கலைத்து விடுமாறும், சில மாதங்களில் திருமணம் செய்து கொள்ளவதாகவும் கூறியுள்ளார். விவேக்கின் வார்த்தையை நம்பி தாட்சாயினியும் கருவை கலைத்துள்ளார். அதன் பின்னரும் பலமுறை தாட்சாயினியுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

இந்நிலையில் கடந்த மாதம் விவேக்கிற்கும், வேறு ஒரு பெண்ணுக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்துள்ளது. மேலும், திருமணத்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை [நவம்பர்-20] வைத்துக்கொள்வது என முடிவு செய்துள்ளனர்.

இதற்கிடையில், விவேக்கின் திருமண ஏற்பாடுகளை அறிந்த தாட்சாயினி அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனால், மனம் உடைந்த தாட்சாயினி வி‌ஷம் அருந்தி தற்கொலைக்கு முயன்றுள்ளார். குடித்த சிறிது நேரத்தில் வீட்டிலேயே மயங்கி கிடந்துள்ளார்.

இதனைக் கண்டு பதறிய அவரது பெற்றோர்கள், சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்த்தனர். வி‌ஷம் குடித்ததற்கான காரணம் குறித்து பெற்றோர் கேட்டபோது, தாட்சாயினி நடந்தவற்றை எடுத்துக் கூறியுள்ளார்.

மேலும், இதுகுறித்து தாட்சாயினி போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதற்கிடையில் தாட்சாயினி தற்கொலைக்கு முயன்ற சம்பவத்தை கேள்விப்பட்ட விவேக் தலைமறைவானார்.

பின்னர், போளூர் பஸ் நிலையத்தில் இருந்து வெளியூர் செல்ல பஸ் ஏற காத்திருந்த விவேக்கை போலீசார் கைது செய்தனர். இதனால், நடைபெறவிருந்த திருமணம் நின்று போனது. திருமண நிகழ்ச்சிக்கு வந்த உறவினர்கள் திரும்பி சென்றனர்.