1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Modified: புதன், 23 ஆகஸ்ட் 2017 (15:45 IST)

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை புதுச்சேரியில் இருந்து விரட்ட கிரண் பேடி நடவடிக்கை?

தினகரன் ஆதரவு எம்எல்ஏக்களை புதுச்சேரியில் இருந்து விரட்ட கிரண் பேடி நடவடிக்கை?

எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிராக தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் போர்க்கொடி தூக்கியுள்ளனர். இதுவரை 19 எம்எல்ஏக்கள் ஆளுநரிடம் எடப்பாடி பழனிச்சாமி மீது நம்பிக்கை இல்லை என தங்கள் ஆதரவை திரும்ப பெற்று கடிதம் கொடுத்துள்ளனர்.


 
 
இந்நிலையில் சசிகலாவின் தம்பி திவாகரன் அளித்த பேட்டியில் தங்களுக்கு ஆதரவாக 40 எம்எல்ஏக்கள் உள்ளதாக கூறியுள்ளார். இதனால் எடப்பாடி பழனிச்சாமி அரசு மீது விரைவில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
 
மேலும் தங்கள் அணியில் உள்ள எம்எல்ஏக்களை எடப்பாடி பழனிச்சாமி அணியினர் இழுத்துவிடக்கூடாது என்பதற்காக அவர்களை புதுச்சேரியில் உள்ள சொகுசு விடுதியில் தினகரன் தங்க வைத்துள்ளதாக கூறப்படுகிறது. புதுச்சேரியில் அரியாங்குப்பம் அருகே உள்ள மனவேலி கிராமத்தில் உள்ள தீ வெண்ட் ஃப்ளவர் ரிசார்ட்டில் எம்எல்ஏக்கள் தங்கியுள்ளதாக கூறப்படுகிறது.
 
அங்கு எம்எல்ஏக்களுக்கு பலத்த விருந்து உபசரிப்புகள் நடப்பதாக தகவல்கள் வருகின்றன. இந்நிலையில் அந்த ரிசார்ட்டின் முன்பு ஓபிஎஸ் ஆதரவாளர்கள் ஓம்சக்தி சேகர் தலைமையில் ஆர்ப்பாட்டம் செய்தனர். ஆனால் அவர்களை உள்ளே விடாமல் போலீசார் தடுத்துள்ளனர்.
 
இந்நிலையில் புதுச்சேரியில் உள்ள எம்எல்ஏக்களை அங்கிருந்து அப்புறப்படுத்த பாஜக பிரமுகர்கள் மூலம் புதுச்சேரி ஆளுநர் கிரண் பேடியை தமிழகத்தை சேர்ந்த முக்கியமான சிலர் முயன்றுள்ளதாக தகவல்கள் வருகின்றன. விரைவில் புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கிரண் பேடி ரிசார்ட்டில் உள்ள எம்எல்ஏக்களை காவல்துறையை அனுப்பி வெளியேற்றுவார் என தகவல் கசிந்துள்ளது.