1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 13 மார்ச் 2024 (13:38 IST)

பிரதமர் சொல்லும் பொய்களை நம்ப நாங்கள் என்ன ஏமாளிகளா.? முதல்வர் மு.க ஸ்டாலின்..!!

cm stalin
தேர்தல் நேரத்தில் வந்து பொய்களை சொன்னால்,  அதை நம்ப தமிழ்நாட்டு மக்கள் என்ன ஏமாளிகளா என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பினார். 
 
கோயம்புத்தூர்,  ஈரோடு,  திருப்பூர் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் புதிய திட்டப் பணிகளுக்கு இன்று பொள்ளாச்சியில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.  
 
மேலும் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்த அவர், நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மத்திய அரசின் ஒத்துழைப்பு இல்லாதபோதே இத்தனை சாதனைகளை நம்மால் செய்ய முடிகிறது என்றால்,  ஒத்துழைப்பு கொடுக்கும் ஆட்சி மத்தியில் அமைந்தால் இன்னும் 10 மடங்கு சாதனைகளை திமுக செய்யும் என்றார் என்றார்.  
 
நாட்டு மக்களுக்கு எதையுமே செய்யாத பிரதமர் மோடியின் உத்தரவாதம் என்று பக்கம் பக்கமாக விளம்பரம் செய்கிறார் என்றும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே,  ஒவ்வொருவருக்கும் ரூ.15 லட்சம் என்ற உங்களது உத்தரவாதத்தின் கதி என்ன என்றும் 2 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற உத்தரவாதத்தின் கதி என்ன?  அதை சொல்லுங்கள் என்றும் ஸ்டாலின் கேள்வி எழுப்பினார்.
 
பாஜக தமிழ்நாட்டுக்கு கொண்டு வரும் திட்டங்களை திமுக தடுப்பதாக,  சென்ற முறை வந்த போது பிரதமர் கூறினார்.  நாம் தடுப்பதற்கு,  அவர் என்ன திட்டத்தை கொண்டு வந்தார்?  எந்த திட்டத்துக்கு நாம் தடையாக இருந்தோம் என்று அவரால் சொல்ல முடியுமா? என்று அவர் தெரிவித்தார்.

 
ஆட்சியில் இருந்த 10 ஆண்டுகள் திரும்பிப் பார்க்காமல்,  தேர்தல் நேரத்தில் தமிழ்நாட்டிற்கு வந்து பொய்களை சொன்னால்,  அதை நம்ப நாங்கள் என்ன ஏமாளிகளா?  பொய்களும், வாட்ஸ்-ஆப் கதைகளும் தான் பாஜகவின் உயிர்மூச்சு என்று முதல்வர் மு க ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.