மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே மாடுகள் வெட்டப்படுவதாக வெளியான தகவல் குறித்து விளக்கத்தை தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் அளித்துள்ளது.
மதுரையின் மத்திய பகுதியில் புகழ்பெற்ற மீனாட்சி அம்மன் கோவில் அமைந்துள்ள நிலையில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும், வெளிநாட்டினரும் இங்கு சுற்றுலா வந்து செல்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் ஒரு வீடியோ சமூக வலைதளத்தில் வெளியானது. மாடியில் வைத்து இறைச்சி உரிக்கும் அந்த வீடியோ மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகே எடுக்கப்பட்டது என்றும், கோவில் அருகே இதுபோல மாட்டுக்கறி வெட்டப்பட்டு சமைக்கப்படுவதாகவும் தகவல்கள் பரவியது.
இதுகுறித்து ஆய்வு செய்த தமிழக அரசின் உண்மை சரிபார்ப்பகம் இந்த வீடியோ குறித்த உண்மை தகவலை வெளியிட்டுள்ளது. வீடியோவில் காட்டப்பட்டுள்ளது மாட்டுக்கறி அல்ல ஆட்டுக்கறி என்றும், மீனாட்சி அம்மன் கோவில் மேலகோபுரம் அருகே வசித்து வரும் சாமியாடியான சிவராமன் என்பவர் தனக்கு வரும் காணிக்கையை சேர்த்து ஆடு அறுத்து அன்னதானம் செய்வதை வழக்கமாக கொண்டுள்ளதாகவும், அந்த வீடியோவே தவறாக சித்தரிக்கப்பட்டு பரப்பப்படுவதாகவும் அதில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.
Edit by Prasanth.K