1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : ஞாயிறு, 15 செப்டம்பர் 2019 (09:13 IST)

”என் ரசிகர்கள் யாரும் எனக்கு பேனர்கள் வைக்கவேண்டாம்”.. தளபதி வலியுறுத்தல்

பிகில் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ரசிகர்கள் யாரும் பேனர் வைக்கவேண்டாம் என நடிகர் விஜய் வலியுறுத்தியுள்ளார்.

குரோம்பேட்டையைச் சேர்ந்த சுபஸ்ரீ என்ற இளம் பெண் மோட்டார் வாகனத்தில் பல்லாவரம் அருகே சென்றுகொண்டிருந்த போது, சாலையின் நடுவே இருந்த பேனர் ஒன்று, காற்றில் சரிந்து அவர் மீது விழுந்தது. இதனால் நிலை தடுமாறி கீழே விழுந்த அவரை, அவருக்கு பின்னால் வந்த லாரி ஏற்றியது. இதனால் சம்பவ இடத்திலேயே சுபஸ்ரீ உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாட்டையே உலுக்கியது.

இதை தொடர்ந்து அரசியல் கட்சி தலைவர்கள் இனி யாரும் தங்களுக்கு பேனர்கள் வைக்கக்கூடாது என அறிவுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பிரபல நடிகர் விஜய் நடித்து வெளியாகவிருக்கும் “பிகில்” திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா வருகிற 19 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இவ்விழாவை முன்னிட்டு தனது ரசிகர்கள் யாரும் தனக்கு பேனர்கள் வைக்ககூடாது என விஜய் வேண்டுகோள் விடுத்ததாக விஜய் மக்கள் இயக்க மாநில பொறுப்பாளர் புஸ்ஸி ஆனந்த் தெரிவித்துள்ளார்.

முன்னணி நடிகர்களான சூர்யா, சிலம்பரசன் ஆகியோரும் தங்களுக்கு பேனர்கள் வைக்கவேண்டாம் என தங்களது ரசிகர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.