வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 8 ஏப்ரல் 2020 (09:00 IST)

விலங்குகளுக்கும் பரவிய கொரோனா !வண்டலூர் உயிரியல் பூங்காவில் கண்காணிப்பு தீவிரம் !

அமெரிக்காவில் உள்ள புலிக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யபப்ட்ட நிலையில் தமிழ்நாட்டில் உள்ள வன உயிரியல் பூங்காவில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

உலகம் முழுவதும் மனித இனத்தையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா வைரசால் இதுவரை 82000 பேர் வரை உயிரிழந்தனர், இந்த வைரஸ் மனிதர்களை மட்டுமே இதுவரைத் தாக்கி வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அமெரிக்காவில் உள்ள பிராக்சன் என்ற உயிரியல் பூங்காவில் உள்ள 4 வயது புலிக்கு திடீரென கொரோனா நோய் தொற்று இருப்பது உறுதி செய்யப் பட்டது. 

இந்த தகவலால் உலகம் முழுவதும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்தியாவில் உள்ள அனைத்து வன உயிரியல் பூங்காக்களில் உள்ள புலி, சிங்கம் மற்றும் மரநாய் ஆகியவற்றையும் 24 மணிநேரமும் கண்காணிக்க சொல்லி மத்திய வன உயிரியல் பூங்கா ஆணையம் மாநில அரசுகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி இருந்தது.

இதன் படி தமிழகத்தில் உள்ள வண்டலூர் உயிரியல் பூங்காவில் கண்காணிப்புப் பணிகள் அதிகப்படுத்தப்பட்டுள்ளன. பூங்காவில் உள்ள  2600 விலங்குகளில் . 25 பெரிய புலிகள், 6 புலிக்குட்டிகள் மற்றும் 17 சிங்கங்கள் உள்ளன. மத்திய அரசின் அறிவுரையின்படி அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக பூங்கா இயக்குனர் யோகேஷ் சிங் தெரிவித்தார்.

விலங்குகளுக்குக் கொடுக்கப்படும் இறைச்சிகள் சோதனை செய்த பின்னரே வழங்கப்படுவதாகவும் பூங்கா தொழிலாளர்களுக்கு உரிய பாதுகாப்புக் கருவிகள் வழங்கப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.