வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 25 மார்ச் 2021 (10:45 IST)

சேலம் வரும் ராகுல் காந்தி; நழுவி செல்லும் வைகோ! – மதிமுக பிரச்சார ப்ளான்!

திமுக தேர்தல் பரப்புரையில் ராகுல்காந்தி கலந்து கொள்ள உள்ள நிலையில் கூட்டணி கட்சி தலைவர் வைகோ அந்த கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் மதிமுக, காங்கிரஸ், விசிக உள்ளிட்ட கட்சிகள் கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்கின்றன. இதற்கான தேர்தல் பிரச்சாரத்தை கூட்டணி கட்சிகள் நடத்தி வரும் நிலையில் மார்ச் 28ம் தேதி சேலத்தில் பிரம்மாண்ட பிரச்சாரத்தை திமுக நடத்த உள்ளது. இந்த பிரச்சார பொதுக்கூட்டத்தில் ராகுல்காந்தி கலந்து கொண்டு பேச உள்ளார்.

இந்நிலையில் ராகுல்காந்தி கலந்து கொள்ளும் இந்த கூட்டத்தில் பங்கேற்க கூட்டணி கட்சி தலைவர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் அந்த கூட்டத்தில் கலந்து கொள்வதை தவிர்த்துள்ள மதிமுக பொது செயலாளர் வைகோ தான் திட்டமிட்டபடி சிவகாசி, விருதுநகர், திருச்சுழி பகுதிகளில் பிரச்சாரம் செய்ய இருப்பதாக மதிமுக அறிவித்துள்ளது.

முன்னதாக ராஜ்யசபா கூட்டத்தில் இலங்கை தமிழர் விவகாரம் குறித்து பேசிய வைகோ கூட்டணி கட்சியான காங்கிரஸை கடுமையாக விமர்சித்திருந்தார். இதனால் தமிழக காங்கிரஸ், மதிமுக இடையே மோதல் எழுந்தது குறிப்பிடத்தக்கது.