வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 10 ஜூலை 2019 (08:56 IST)

மதிமுகவில் வாரிசு அரசியலுக்கு இடமில்லை – வைகோ உறுதி !

மதிமுக வில் தனது மகனை முக்கியப் பொறுப்புக்குக் கொண்டுவரப் பார்க்கிறார் வைகோ என்ற கேள்விகளுக்கு மறுப்புத் தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணி சார்பில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ ராஜ்யசபா வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். ஆனால் அவர் மீதான தேசத்துரோக வழக்கில் ஓராண்டு சிறைத்தண்டனையும் ரூ.10ஆயிரம் தண்டனையும் மதிமுக விதிக்கப்பட்ட நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு ஒருமாதம் வரை நிறுத்தப்பட்டுள்ளது. ராஜ்யசபா தேர்தலில் அவரது வேட்புமனு நிராகரிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக சந்தேகங்கள் எழுந்தன.

ஒருவேளை அப்படி எதுவும் நடந்தால் அதற்குத் தயாராக திமுகவின் சட்ட ஆலோசகரும் மூத்த வழக்கறிஞருமான என்.ஆர்.இளங்கோ, திமுக சார்பாக வேட்புமனுத்தாக்கல் செய்துள்ளார். இது மதிமுக தொண்டர்கள் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது என சில நாளிதழ்கள் செய்தி வெளியிட்டன. மேலும் வைகோ தனது மகனைக் கட்சியில் முன்னிறுத்தப் பார்ப்பதாகவும் அதற்கு கட்சிக்குள் எதிர்ப்புகள் பலமாக இருப்பதாகவும் கூறப்பட்டது.

இதை மறுக்கும் விதமாக நேற்று மதிமுக கட்சி அலுவலகத்தில் வைகோ பத்திரிக்கையாளர்களை சந்தித்தார். அப்போது  ‘நான் எம்.பி. ஆவதாக இருந்தால்தான் மதிமுகவுக்கு சீட் என திமுக தலைவர் ஸ்டாலின் ஒப்பந்தத்தின் போது கூறினார். அதனால் இப்போது நான் எம்பி ஆவதில் சிக்கல் இருப்பதால் ஸ்டாலினை மாற்று ஏற்பாடு செய்யக் நான்தான் கூறினேன். என் குடும்பத்தில் உள்ளவர்களைக் கட்சிக்குள் முக்கியப்பதவி கொடுக்க நினைப்பதாக சில நாளிதழ்கள் கற்பனை செய்திகளை வெளியிட்டிருப்பது வேதனை அளிக்கிறது. என் தம்பியும் என் மகனும் கட்சியில் எனக்கு உறுதுணையாக இருக்கிறார்கள். பதவி அரசியலை என் மகனும் விரும்பவில்லை. நானும் விரும்பவில்லை. இந்த இயக்கத்தை அடுத்த கட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்வதற்கு எத்தனையோ இளைஞர்கள், ஆற்றல் உள்ளவர்கள் இயக்கத்திற்காகப் பாடுபட்டவர்கள் இருக்கிறார்கள்.’ எனக் கூறி தன் மீதான சந்தேகங்களுக்கு விளக்கம் அளித்துள்ளார்.