1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 10 ஜூலை 2020 (11:48 IST)

கூவத்தூர் கோஷ்டிக்கு விரைவில் ஷாக் அடிக்கும்! – உதயநிதி காட்டம்!

தமிழகத்தில் வீடுகளுக்கு அதிக அளவில் மின் கட்டணம் வசூலிக்கப்பட்டது குறித்து அரசு அளித்துள்ள விளக்கத்திற்கு உதயநிதி கண்டனம் தெரிவித்துள்ளார்.

தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட நிலையில் மின் கட்டண ரீடிங் எடுக்கப்படாமல் இருந்தது. முந்தைய மாதங்களில் கட்டிய கட்டணத்தையே கட்ட அரசு அறிவுறுத்தியது. இந்நிலையில் மூன்று மாதங்களுக்கும் சேர்த்து ரீடிங் எடுக்கப்பட்டதால் கட்டணம் அதிகமாக வந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இதுகுறித்து அரசு அளித்துள்ள விளக்கத்தில் ‘மக்கள் நாள் முழுவதும் வீடுகளில் முடங்கியுள்ளதால் மின்சாதன பொருட்களை அதிகம் உபயோகித்திருப்பதால் கட்டணம் உயர்ந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

அரசின் இந்த பதில் குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் ” ஊரடங்கால் 24 மணி நேரமும் மக்கள் வீட்டில் இருக்கின்றனர். யாருக்கும் ரீடிங் தெரிவதில்லை' என நடத்தும் வேட்டையை நியாயப்படுத்தும் கூவத்தூர் கோஷ்டிக்கு மக்கள் தீர்ப்பு விரைவில் ஷாக் அடிக்கும். அப்போது வடக்கேயிருக்கும் உங்கள் முதலாளிகள் நினைத்தாலும் காப்பாற்ற முடியாது!” என்று காட்டமாக தெரிவித்துள்ளார்.