1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: செவ்வாய், 13 ஜூன் 2023 (14:30 IST)

சாதாரண மக்கள் கையில் சயனைடு எப்படி கிடைக்கிறது? மயிலாடுதுறை சம்பவம் குறித்து டிடிவி தினகரன்..!

தஞ்சாவூரைத் தொடர்ந்து மயிலாடுதுறையிலும் சயனைடு கலந்த மது குடித்து இருவர் உயிரிழந்திருப்பதாக செய்திகள் வெளியாகி இருப்பது அதிர்ச்சியளிக்கிறது என்றும், சாதாரண மக்கள் கையில் சயனைடு எப்படி கிடைக்கிறது? என்றும் மயிலாடுதுறை சம்பவம் குறித்து டிடிவி தினகரன் கேள்வி எழுப்பியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
சில நாட்களுக்கு முன் தஞ்சாவூரில் இருவர் மதுவில் சயனைடு கலந்து குடித்து உயிரிழந்தது குறித்து 20 நாட்களுக்கும் மேலாக தனிப்படை போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் அவர்கள் கொலை செய்யப்பட்டார்களா? அல்லது தற்கொலை செய்து கொண்டார்களா என்பது போன்ற கேள்விகளுக்கு இன்னும் விடை கிடைக்கவில்லை.
 
அடுத்தடுத்து இரண்டு சம்பவங்களில் சயனைடு காரணமாக உயிரிழப்பு நேரிட்டுள்ளது சாதாரணமாகக் கடந்து செல்லக் கூடிய விஷயமல்ல. தொழிலக பயன்பாடுகளுக்கு மட்டுமே அனுமதிக்கப்படும் சயனைடு சாதாரண மக்கள் கையில் எப்படி கிடைக்கிறது என்ற கேள்வியை இந்த சம்பவங்கள் எழுப்புகின்றன.
 
தஞ்சாவூர், மயிலாடுதுறை மரணங்கள் குறித்து உண்மையை கண்டுபிடிப்பதுடன், சயனைடு பயன்பாடு அதிகரித்திருப்பது குறித்தும், அதன் விற்பனை, சட்டவிரோத பயன்பாடு ஆகியவற்றை கண்காணிப்பது குறித்தும் நடவடிக்கை மேற்கொள்ள முதலமைச்சர் உடனே உத்தரவிட வேண்டும் என்று வலியுறுத்துகின்றேன். 
 
Edited by Mahendran