1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By VINOTH
Last Modified: செவ்வாய், 19 டிசம்பர் 2023 (12:12 IST)

ஆட்டோ மீது லாரி மோதல்! பாட்டியுடன் சென்ற பேரன் பலி! – பூந்தமல்லியில் அதிர்ச்சி!

Accident
உரிய ஆவணங்கள் இல்லாமல் ஷேர் ஆட்டோக்கள் இயங்குவதாக பொதுமக்கள் புகார்


 
பூந்தமல்லி அடுத்த பாரிவாக்கம், கருமாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் செந்தில் வேலன் இவரது மகன் சாய் தர்ஷன்(8), கடந்த மூன்று தினங்களுக்கு முன்பு சாய் தர்ஷன் தனது பாட்டி பழனியம்மாள்(65), என்பவருடன் பூந்தமல்லிக்கு சென்று பொருட்கள் வாங்கிவிட்டு அங்கிருந்து ஷேர் ஆட்டோ மூலம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தனர். ஷேர் ஆட்டோவில் பத்துக்கும் மேற்பட்டோர் பயணம் செய்த நிலையில் பூந்தமல்லி பட்டாபிராம் சாலையில், பாரிவாக்கம் அருகே சென்று கொண்டிருந்த போது எதிரே வந்த அடையாளம் தெரியாத லாரி ஆட்டோவின் மீது மோதியதில் பழனியம்மாளுக்கும், சாய் தர்சனுக்கும் காயம் ஏற்பட்டது.

இதையடுத்து ஆட்டோவில் வந்த மற்ற பயணிகளை இறக்கிவிட்டு காயமடைந்த இருவரையும் பூந்தமல்லியில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்று சேர்த்தனர். லேசான காயங்களுடன் தப்பிய பழனியம்மாள் வீடு திரும்பிய நிலையில் தலையில் காயமடைந்த சாய் தர்ஷனை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். சிகிச்சை பெற்று வந்த சாய் தர்ஷன் சிகிச்சை பலனின்றி இன்று பரிதாபமாக இறந்து போனார். இந்த சம்பவம் குறித்து ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்துக்குள்ளான ஆட்டோவை பறிமுதல் செய்து விபத்தை ஏற்படுத்தி விட்டு சென்ற லாரியை தேடி வருகின்றனர்.

பூந்தமல்லி பகுதிகளில் ஷேர் ஆட்டோக்களில் அதிக அளவில் பயணிகளை ஏற்றி செல்வதாகவும் பல்வேறு ஆட்டோக்களுக்கு உரிய ஆவணங்கள் இல்லாமல் இயங்கி வருவதாகவும் இதனை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்காமல் தயக்கம் காட்டி வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.