வியாழன், 19 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வியாழன், 15 ஆகஸ்ட் 2024 (11:29 IST)

சர்ச்சையை கிளப்பி மதவாத அரசியல் செய்வதற்காகத்தான் திருச்சி விமான நிலையத்தில் சமஸ்கிருதத்தில் கல்வெட்டு வைக்கப்பட்டுள்ளது - துரை வைகோ!

ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டதை கண்டித்தும், நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தியும் மதிமுக சார்பில் இன்று தமிழக முழுவதும் ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
 
அதன்படி திருச்சி மாவட்டத்தில் திருச்சி மாவட்ட மதிமுக சார்பில் ஜங்ஷன் ரயில் நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதிமுக முதன்மை செயலாளரும் திருச்சி மக்களவைத் தொகுதி உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர்.
 
இந்த ஆர்ப்பாட்டத்தில் துரை வைகோ பேசுகையில்......
 
ஒன்றிய அரசு பட்ஜெட்டில் தமிழகத்திற்கு முறையாக நிதி ஒதுக்கவில்லை. இந்திய ஏற்றுமதியில் தமிழகத்தின் பங்கு 10 சதவீதமாக உள்ளது, உள்நாட்டு உற்பத்தியில் தமிழகத்தின் பங்கு 8 சதவீதமாக உள்ளது, இந்திய மக்கள் தொகையில் தமிழ்நாட்டில் ஆறு சதவீதம் மக்கள் உள்ளனர். 
 
ஆனால் அனைத்து துறைகளுக்கும் சேர்த்து ஒன்றிய அரசு வெறும் 4 சதவீதம் மட்டுமே தமிழகத்திற்கு நிதி ஒதுக்கி உள்ளது. 
 
இந்தியாவின் வளர்ச்சிக்கு முக்கிய பங்காற்றும் தமிழ்நாட்டிற்கு மிகவும் குறைவான நிதியை ஒதுக்கப்பட்டுள்ளது. ஒன்றிய அரசால் செயல்படுத்தப்படும் சென்னை மெட்ரோ
மெட்ரோ திட்டத்தின் இரண்டாம் கட்ட பணிகளுக்கும் மதுரை கோவை உள்ளிட்ட மாவட்டங்களில் மெட்ரோ  அமைப்பதற்கும் ஒரு பைசா கூட நிதி ஒதுக்கவில்லை.
 
தமிழ்நாட்டில் 9 க்கும் மேற்பட்ட ரயில் திட்டங்கள் 13 ஆண்டுகளுக்கு முன் அறிவிக்கப்பட்டது. ஆனால் இதுவரை அதில் ஒன்று கூட செயல்படுத்தப்படவில்லை.
 
வெள்ள பாதிப்பிற்கு நிதி ஒதுக்காமல் விட்டால் தமிழக அரசு மீது மக்கள் கோபம் கொள்ளவார்கள் என ஒன்றிய அரசு நினைத்தது. ஆனால் தமிழக மக்கள் யார் மீது தவறு என்பதை நன்றாக புரிந்து கொண்டார்கள் அதன் விளைவாகத்தான் 40க்கு 40 வெற்றி கொடுத்தார்கள்.
 
ஒன்றிய மைனாரிட்டி அரசை காப்பாற்றி கொள்ளவே இந்த நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
 
ஒன்றிய அரசு தொடர்ந்து இதே போல் தமிழ்நாட்டை புறக்கணித்தால் வரும் சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் பாஜக டெபாசிட் கூட வாங்காது.
 
தமிழ்நாட்டில் நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என குரல் எழுப்பி வந்தோம் அந்த குரல் இன்று நாடு முழுவதும் ஒழித்து வருகிறது. ஒன்றிய அரசு நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும்.
 
ஒன்றிய அரசின் பட்ஜெட்டில் எந்த மாநிலமும் புறக்கணிக்கப்படவில்லை, தமிழ்நாட்டிற்கு உரிய நிதி ஒதுக்கப்பட்டுள்ளது என பாஜகவினர் பொய் பிரச்சாரம் செய்து வருகிறார்கள் மக்களை திசை திருப்ப அவ்வாறு அவர்கள் செய்கிறார்கள். மக்கள் அதனை நம்ப மாட்டார்கள்.
 
இந்தியாவில் மொத்தமாக 1000 பேருக்கு கூட தெரியாத சமஸ்கிருத மொழியை திருச்சி விமான நிலையத்தில் கல்வெட்டில் வைத்துள்ளார்கள். அதை நாம் எதிர்த்து பேசினால் வட இந்தியாவில் அதனை காட்டி இந்து மதத்திற்கு எதிராக பேசுவதாக பிரச்சாரம் செய்கிறார்கள். சர்ச்சையை கிளப்பி மதவாத அரசியல் செய்வதற்காகவே இதுபோன்ற செயல்களில் ஒன்றிய அரசு ஈடுபட்டுள்ளது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது.
 
பாஜகவின் துணைத் தலைவராக உள்ள கே.பி ராமலிங்கம் பாஜகவில் சேர்வதற்கு முன்பு வரை நன்றாக தான் இருந்தார் ஆனால் பிரிவினையை பேசும் அந்த கட்சியில் சேர்ந்த பின்பு தமிழ்நாட்டை பிரிக்க வேண்டும் என அவர் பேசுகிறார் என தெரிவித்தார்.