1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 14 ஜூன் 2020 (10:15 IST)

நாளை நண்பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவைக் கூட்டம்: மீண்டும் தீவிர பொதுமுடக்கமா?

தமிழகத்தில் குறிப்பாக தலைநகர் சென்னையில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே போய்கிறது. நேற்று தமிழகத்தில் 1989 பேர்களுக்கும் சென்னையில் 1487 பேர்களுக்கும் கொரோனா பாதிப்பு இருந்ததால் கொரோனா நோயை கட்டுப்படுத்த முடியாமல் தமிழக அரசு திணறி வருகிறது என்பது உறுதியாகிறது 
 
இந்த நிலையில் கொரோனா வைரஸ் தீவிரமாக இருக்கும் சென்னை உள்பட நான்கு மாவட்டங்களுக்கு தீவிர பொதுமுடக்கத்தை அமல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. ஆனால் இதுகுறித்து சமீபத்தில் தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவித்த போது சென்னையில் தீவிர பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் எண்ணமில்லை என்று கூறியது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் நாளை நண்பகல் 12 மணிக்கு தமிழக அமைச்சரவை கூட்டம் நடைபெற இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடைபெறும் இந்த கூட்டத்தில் மருத்துவ நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். மருத்துவர்களுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களும், அமைச்சர்களும் திடீரென ஆலோசனை நடத்த உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
முதலமைச்சரின் இந்த முக்கிய ஆலோசனையை அடுத்து ஒரு சில முக்கிய அறிவிப்புகள் வெளிவரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் சென்னை உள்ளிட்ட நான்கு மாவட்டங்களுக்கு தீவிர பொதுமுடக்கத்தை அமல்படுத்தும் தகவல் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றே தமிழக அரசு வட்டாரங்கள் கூறுகின்றன