வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 18 ஜூலை 2019 (06:28 IST)

முதல்வர் குமாரசாமி தப்பிப்பாரா? இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு!

கர்நாடக மாநிலத்தில் தற்போது ஆட்சி செய்து வரும் மதச்சார்பற்ற ஜனதா தளம் மற்றும் காங்கிரஸ் கூட்டணி அரசின் முதலமைச்சர் குமாரசாமி இன்று நம்பிக்கை கோரும் தீர்மானத்தை சட்டசபையில் தாக்கல் செய்கிறார். இந்த ஓட்டெடுப்பின் முடிவில்தான் அவரது ஆட்சி தப்பிக்குமா? அல்லது கவிழுமா? என்பது தெரியவரும்
 
முதல்வர் குமாரசாமி தலைமையிலான ஆட்சியில் அதிருப்தி ஏற்பட்டால் 13 காங்கிரஸ் எம்எல்ஏக்கள், 3 மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் எம்.எல்.ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா கடிதத்தை கொடுத்ததால் கர்நாடக அரசியலில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால் சபாநாயகர் ராஜினாமா கடிதங்களை ஏற்கவில்லை. இதனையடுத்து இதுகுறித்த வழக்கு ஒன்று நீதிமன்றத்துக்கு சென்றது. நீதிமன்றம் நேற்று அளித்த தீர்ப்பில் ராஜினாமா எம்எல்ஏக்கள் குறித்த முடிவை சபாநாயகரே எடுக்கலாம் என்று தீர்ப்பளிக்கப்பட்டது 
 
இந்த நிலையில்தான் முதல்வர் குமாரசாமி இன்று நம்பிக்கை ஓட்டெடுப்பு நடத்தவுள்ளார். நம்பிக்கை ஓட்டெடுப்புக்கு முன்னர் அந்த தீர்மானத்தின் மீது விவாதம் நடத்துவதா? அல்லது விவாதம் நடத்தாமல் நேரடியாக ஓட்டெடுப்பை நடத்துவதா? என்பதை முதல்வர் தீர்மானிப்பார் என்று கூறப்படுகிறது 
 
ஓட்டெடுப்பு நடத்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால் சட்டசபையின் அனைத்து கதவுகளும் மூடப்பட்டு எம்எல்ஏக்களிடம் ஓட்டெடுப்பு நடத்தப்படும். முதலில் தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பவர்கள் கையை தூக்குவார்கள். அவர்கள் எண்ணப்பட்டு அவர்களிடம் கையெழுத்து வாங்கப்படும்.  அதன்பின் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் கையை தூக்குவார்கள். அவர்களிடமும் கையெழுத்து வாங்கப்படும். இதன் பின்னர் ஓட்டெடுப்பின் முடிவு அறிவிக்கப்படும்
 
முதல்வர் குமாரசாமியின் நம்பிக்கை வாக்கெடுப்பின் முடிவை அறிந்து கொள்ள கர்நாடக மாநிலம் மட்டுமின்றி நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றது