1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: திங்கள், 18 செப்டம்பர் 2017 (10:06 IST)

தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களை வழிமறித்து மிரட்டிய நபர்கள்....

கர்நாடகாவில் உள்ள தினகரன் எம்.எல்.ஏக்கள் ஒரு இடத்தை பார்க்க வெளியே சென்ற போது  தமிழக போலீசார் எனக் கூறிக்கொண்டு சிலர் அவர்களை மிரட்டியதாக செய்திகள் வெளிவந்துள்ளது.


 

 
தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் தற்போது கர்நாடக மாநிலம் குடகு மாவட்டம் குஷால் நகரில் உள்ள கூர்க் சொகுசு விடுதியில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
 
நேற்று காலை அவர்கள் அனைவரும் தலைக்காவிரி உட்பட  கார்நாடக மாநிலத்தில் உள்ள சில இடங்களை சுற்றிப்பார்ப்பதற்காக இரண்டு வேன்களில் வெளியே சென்றனர். தலைக்காவிரியில் நீராடி விட்டு, புகழ்பெற்ற அப்பி நீர்வீழ்ச்சிக்கு சென்றனர். அதன் பின் அங்கிருந்து கிளம்பி தலைநகர் மடிகேரி சென்றுவிட்டு, அங்கிருந்து விடுதிக்கு கிளம்பினர்.
 
அப்போது, மடிகேரி புறநகர் பகுதியில் வேன் சென்று கொண்டிருந்த போது, கர்நாடக பதிவு எண் கொண்ட இரண்டு வாகனங்களில் வந்த சிலர் அவர்களை வழிமறித்தனர்.
 
அந்த வாகனங்களில் இருந்து இறங்கிய சிலர், தங்களை தமிழக போலீசர் எனக் கூறி, வாகனங்களின் ஆவணங்களை சரி பார்க்க வந்துள்ளோம் எனக் கூறி சோதனை செய்தனர். அதன் பின் வேனில் இருந்த 2 எம்.எல்.ஏக்களை மட்டும் தனியாக அழைத்து சென்று, நீங்கள் எடப்பாடி அரசுக்கு ஆதரவளிக்க வேண்டும். இல்லையேல் பல பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க வேண்டி இருகும் என மிரட்டியதாக தெரிகிறது.
 
இதையடுத்து அந்த 2 எம்.எல்.ஏக்களும் அவர்களிடம் வாக்குவாதம் செய்தனர். அதோடு, வேனில் இருந்த சிலர் அவர்களை செல்போன் மூலம் வீடியோ எடுக்க முயன்றனர். எனவே, தமிழக போலீசார் எனக் கூறிக்கொண்ட அவர்கள் தாங்கள் வந்த வாகனத்தில் ஏறி சென்றுவிட்டனர். 
 
இதையடுத்து, இதுகுறித்து குடகு மாவட்ட காவல் நிலையத்தில் தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்கள் புகார் அளித்தனர்.