ஞாயிறு, 28 டிசம்பர் 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By BALA
Last Modified: புதன், 24 டிசம்பர் 2025 (21:03 IST)

செவிலியர்களுக்கு பணி நிரந்தரம்.. அரசு அறிவிப்பு.. முடிவுக்கு வந்த போராட்டம்...

nurse
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவமனைகள் மற்றும் இதர மருத்துவ அமைப்புகளில் 17,000 செவிலியர்கள் நிரந்தர பணியாளர்களாகவும் 13,000 பேர் ஒப்பந்த அடிப்படையிலும் பணியாற்றி வருகிறார்கள். ஒப்பந்த செவிலியர்களுக்கு 18000 ரூபாய் சம்பளமாக கொடுக்கப்படுகிறது. எனவே, பணி நிரந்தரம், நிரந்தர ஊழியர்களுக்கு இணையான சம்பளம் உள்ளிட்ட சில கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த நான்கு மாதங்களாகவே ஒப்பந்த செவிலியர்கள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

சமீபத்தில் இந்த போராட்டம் தீவிரமடைந்தது. தமிழ்நாடு செவிலியர் துறை மேம்பாட்டு சங்கத்தின் சார்பில் சென்னையில் உண்ணாவிரதப் போராட்டமும் நடந்தது. அப்போது 700க்கும் மேற்பட்ட செவிலியர்கள் கைது செய்யப்பட்டு கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையத்தில் இறக்கிவிடப்பட்டனர். ஆனால், செவிலியர்கள் அங்கேயும் போராட்டம் நடத்தவே மீண்டும் அவர்கள் கைது செய்யப்பட்டு ஊரப்பாக்கத்தில் உள்ள ஒரு தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைக்கப்பட்டார்கள்.

சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியம் நடத்திய பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படவில்லை. எனவே மண்டபத்திலிருந்து வெளியேறிய செவிலியர்கள் நந்திவரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார்கள். கடந்த திங்கட்கிழமையும் மா.சுபிரமணியன் செவிலியர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தினார். ஆனால் உடன்பாடு ஏற்படவில்லை.

இந்நிலையில் தற்போது மா.சுப்பிரமணியம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘முதல் கட்டமாக 1000 ஒப்பந்த செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள். மீதமுள்ளவர்கள் படிப்படியாக பணி நிரந்தம் செய்யப்படுவார்கள். மேலும் ஒப்பந்த செவிலியர்களுக்கு ஊதியத்துடன் கூடிய மகப்பேறு விடுமுறையும் அளிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதேபோல் கொரோனா காலத்தில் பணியமர்த்தப்பட்ட 72 செவிலியர்கள் விரைவில் பணி நியமனம் செய்யப்படுவார்கள். இதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும்’ என அறிவித்திருக்கிறார். இதைத்தொடர்ந்து செவிலியர் போராட்டம் முடிவுக்கு வந்திருக்கிறது.