வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜூலை 2019 (10:23 IST)

முகிலன் சிக்கியது எப்படி??..பரபரப்பு தகவல்

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை எதிர்ப்பு போரட்டத்தின் போது, போலீஸாரின் துப்பாக்கிச் சூடு சம்பவம் தொடர்பான வீடியோவை வெளியிட்ட முகிலன், பல மாதங்களாக தலைமறைவான நிலையில் தற்போது சிக்கியது எப்படி என தகவல் வெளியாகியுள்ளது.

ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த சமூக ஆர்வலரான முகிலன், சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் கடந்த பிப்ரவரி மாதம், ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த, போலீஸ் துப்பாக்கி சூடு சம்பந்தமான வீடியோ ஆதாரத்தை வெளியிட்டார்.

பின்பு அன்றைய தினம் இரவு, சென்னை எழும்பூர் ரயில் நிலையத்தில் இருந்து மதுரைக்கு ரயிலில் செல்லும் வழியில் முகிலன் காணாமல் போனார். கிட்டத்தட்ட 5 மாதங்களாக மாயமாக இருந்த நிலையில் கடந்த 6 ஆம் தேதி திருப்பதி ரெயில் நிலையத்தில் முகிலன் மீட்கப்பட்டார். அவரை தற்போது பாலியல் புகார் ஒன்றில் கைது செய்துள்ளனர்.

இந்நில்லையில் சி.பி.சி.ஐ.டி-யிடம் முகிலன் எவ்வாறு சிக்கினார் என்கிற தகவல் தற்போது வெளிவந்துள்ளது. முகிலன் காணாமல் போன பிறகு அவரது சொந்த ஊரான சென்னிமலையில் வசித்து வரும், முகிலனுடைய மனைவி மற்றும் மகன் ஆகியோருடைய செல்ஃபோன்களை சி.பி.சி.ஐ.டி. ரகசியமாக கண்கானித்து வந்துள்ளனர்.

மேலும் சென்னிமலையில் வசிக்கும் முகிலனின் உறவினர்களின் செல்ஃபோன் அழைப்புகள் முதற்கொண்டு சி.பி.சி.ஐ.டியால் கண்காணிக்கப்பட்டன. அதுபோக முகிலனின் உறவினர்களின் நடத்தைகளையும் கண்காணிக்க மாறுவேடத்தில் அங்கேயே தங்கியிருந்தனர்.

அப்போது பல்வேறு செல்ஃபோன் எண்களில் இருந்து முகிலன், உறவினர்களை தொடர்பு கொண்டது தெரியவந்தது. அதன் பின்னர் செல்ஃபோன் சிக்னலகளை வைத்து போலீஸார் நாடு முழுவதும் விசாரணை நடத்தியதில், அந்த எண்கள் அனைத்தும் திருப்பதியிலிருந்து பயன்படுத்தி வந்த எண்கள் என்று கண்டுபிடித்தனர்.

உடனே திருப்பதி போலீஸாருக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீஸார் தகவல் தெரிவித்தனர். அந்த தகவலின் அடிப்படையில், திருப்பதி போலீஸார் முகிலனை தேடிவந்தனர்.

இதனிடையே போலீஸார் தன்னுடைய இருப்பிடத்தை கண்டுபிடித்துவிட்டனர் என்ற தகவலை அறிந்த முகிலன், திருப்பதி ரயில் நிலையத்தின் தண்டவளத்தில், ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து கோஷமிட்டார். இதனை கண்ட ரயில்வே போலீஸார், முகிலனை வலுக்கட்டாயமாக போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர்.

அதன் பின்பு முகிலனை விசாரித்ததில், அவர் தான் சி.பி.சி,ஐ.டி, தேடிக்கொண்டிருக்கும் முகிலன் என்று தெரியவந்தது. பின்பு முகிலன், சென்னை போலீஸாரிடம், தகவல் தெரிவிக்கப்பட்டு ஒப்படைக்கப்பட்டார்.

கைதான முகிலன், போலீஸாரிடம், தான் சில மர்ப நபர்களால் கடத்தப்பட்டதாக கூறியுள்ளார். யார் கடத்தினார்கள்? எதற்கு கடத்தினார்கள் என்பதை தற்போது விசாரித்து வருகின்றனர். மேலும் முகிலன் மீது, ஒரு பெண் பாலியல் குற்றசாட்டு அளித்துள்ளார் என்றும், அதற்காகத் தான் தற்போது முகிலன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.

முகிலன் எதற்காக தலைமறைவானார்? அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு உண்மையா? அவரை நிஜமாகவே மர்ப நபர்கள் கடத்தி சென்றனரா? என்பது போன்ற பல கேள்விகளுக்கு விடை கிடைக்குமா என எதிர்பார்க்கலாம்.