1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 29 ஜூன் 2024 (13:59 IST)

தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு தற்போது இல்லை..! அமைச்சர் முத்துசாமி திட்டவட்டம்..!!

Muthusamy
தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கிற்கான சூழல் தற்போது இல்லை என மதுவிலக்கு அமைச்சர் முத்துசாமி சட்டப்பேரவையில் தெரிவித்துள்ளார்.
 
மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதாவை, தமிழக சட்டப்பேரவையில் அமைச்சர் முத்துசாமி தாக்கல் செய்தார். அதன்படி,  இனி தமிழ்நாட்டில் இனி கள்ளச்சாராயம் விற்றால் ஆயுள்தண்டனை விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் 10 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது 
 
கள்ளச்சாராயம் விற்பனை, பதுக்கல் என அனைத்துவிதமான குற்றங்களையும் தடுக்கும் வகையில் சட்டதிருத்தம் செய்யப்பட்டுள்ளது. கள்ளச்சாராய விற்பனை, தயாரிப்புக்கு வழங்கப்படும் தண்டனைகள் போதுமானததாக இல்லாததால் சட்ட திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
 
மசோதாவை தாக்கல் செய்து பேசிய அமைச்சர் முத்துசாமி, முழு மதுவிலக்கை அமல்படுத்த அரசுக்கு விருப்பம் உள்ளது என்றும் ஆனால், தமிழ்நாட்டில் அதற்கான சூழல் தற்போது இல்லை என்றும் தெரிவித்தார். படிப்படியாக கடைகளை குறைத்தும், குடிப்பவர்களின் எண்ணிக்கை குறையவில்லை என அவர் கூறினார். 


ஒரு கடையை மூடினாலும் மற்ற கடைகளுக்குச் சென்று வாங்கி குடிக்கிறார்கள் என்று அமைச்சர் முத்துசாமி தெரிவித்தார். இதனிடையே மதுவிலக்கு திருத்தச் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது.