1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: சனி, 21 அக்டோபர் 2023 (21:10 IST)

மாற்றுத் திறனாளி இளம் பெண்ணை கோவிலில் இருந்து வெளியேற்றிய பூசாரி

karur
கரூரில் வீல் சேரில் கொழு பார்க்க ஆசையாக வந்த மாற்றுத் திறனாளி இளம் பெண்ணை கோவிலில் இருந்து வெளியேற்றிய பூசாரி  - பாதிக்கப்பட்ட பெண்ணின் தாய மகளின் நிலை குறித்து சமூக ஊடகத்தில் பதிவிட்டு வேதனை.
 
கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட வடக்கு சாமிநாதபுரத்தை சார்ந்தவர் அம்புஜம். இவருக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவரது கணவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இயற்கை எய்திய நிலையில் மாற்றுத் திறனாளியான 27 வயது மகள் மோகன பிரியாவுடன் வசித்து வருகிறார். அக்கம், பக்கத்தில் வசிப்பவர் மேற்கு பிரதட்சணம் சாலையில் உள்ள அன்னகாமாட்சியம்மன் கோவிலில் வைக்கப்பட்டுள்ள கொழு நன்றாக இருப்பதாக அக்கம்பக்கத்து வீட்டுகாரர்கள் கூறியுள்ளனர். 
 
இது தொடர்பாக மாற்றுத் திறனாளியான இளம் பெண் தன் தாயிடம் கொழு பார்க்க தன்னை அழைத்துச் செல்லும்படி கேட்டுள்ளார். அவர் நேற்று தனது மகன், மருமகள், மாற்றுத் திறனாளி பெண்ணை வீல் சேரில் அமர வைத்து அந்த கோவிலுக்குச் சென்றுள்ளார். மகன், மருமகள் மூலவரை தரிசனம் செய்து கொண்டிருந்த நிலையில், அம்புஜம் தனது மாற்றுத் திறனாளி மகளை வீல் சேரில் கோவிலுக்குள் அழைத்துச் சென்று கொழு பார்க்க சென்றுள்ளார். 
 
அப்போது, கோவிலில் இருந்த பூசாரி உள்ளே வரக் கூடாது வெளியில் நின்றுதான் சாமி தரிசனம் செய்ய வேண்டும் எனக் கூறி கொழுவையும், மூலவரையும் பார்க்க விடாமல், திருநீரும் கொடுக்காமல் வெளியேற்றியுள்ளார். இதனை தொடர்ந்து அவர்கள் வீடு திரும்பியுள்ளனர். இரவு முழுவதும் மாற்றுத் திறனாளி இளம் பெண் வேதனையுடன் தனது தாயிடம் கேள்வி எழுப்பியதுடன், பெரும் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளார். 
 
இதனால் மன வேதனை அடைந்த அம்புஜம்,  தனது மகளின் புகைப்படத்துடன் ஆடியோ ஒன்றரையும் தன்னிடம் இருக்கும் வாட்ஸ் அப் குழுக்களுக்கு பகிர்ந்துள்ளார். அந்த தகவல் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
 
என் மகள் போன்று எவ்வளவோ குழந்தைகள் உள்ளனர். அவர்களுக்கும் இந்த நிலை வரக் கூடாது என தெரிவித்தார். இது தொடர்பாக அந்த கோவில் சார்பில் அம்புஜத்திடம் பேசிய நபர், நீங்கள் சாலையில் வீல் சேரை தள்ளிக் கொண்டு வருகிறீர்கள், அதில் அசுத்தங்கள் பட்டிருந்தால் அவை கோவிலுக்குள் வந்து விடும் என்பதாலே உங்களை உள்ளே வர அனுமதிக்கவில்லை என விளக்கமளித்ததாக அவர் தெரிவித்தார்.