1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : புதன், 3 ஜனவரி 2024 (12:45 IST)

ஆளுநர் செல்லும் வழியில் தீக்குளித்த முதியவர் பலி..!!

sucide
மணிப்பூர் ஆளுநர் இல.கணேசன் செல்லும் வழியில் திடீரென தீக்குளித்த முதியவர் பலத்த காயங்களுடன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் பரிதாபமாக உயிர் இழந்தார்.
 
மதுரை மடீட்சியா அரங்கில் பாஜக மாநில நிர்வாகி ராம.ஸ்ரீனிவாசன் எழுதிய புத்தக வெளியீட்டு விழா நேற்று மாலை நடைபெற்றது. இதில், கலந்து கொள்ள மணிப்பூர் மாநில ஆளுநர் இல.கணேசன் நேற்று காலை 11.20 மணிக்கு சென்னையில் இருந்து விமானம் மூலம் மதுரை வந்தார்.
 
பின்னர் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு அழகர்கோவில் சாலையில் உள்ள அரசு சுற்றுலா மாளிகை சென்று தங்கினார். ஆளுநர் வருகையையொட்டி, விமான நிலையம் துவங்கி, அவர் தங்கும் விடுதி வரை போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆளுநர் கான்வாய் செல்லும் வழியில் மதுரை கே.கே. நகர் அருகே வக்பு வாரிய கல்லூரி எதிரே 50 வயது மதிக்கத்தக்க முதியவர் ஒருவர் திடீரென, தன் உடலில் தின்னரை ஊற்றி தீக்குளித்தார். அவரின் உடலில் தீ பரவிய நிலையில் அலறி துடித்தார்.
 
90 சதவீத தீக்காயங்களுடன் மயங்கிய முதியவரை போலீசார் மீட்டு மதுரை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு  சிகிச்சை பலனின்றி அவர் உயிர் இழந்தார்.
 
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து அண்ணா நகர் போலீசார் நடத்திய விசாரணையில், தீக்குளித்து இறந்தவர் மதுரை மாவட்டம், அலங்காநல்லூர் அருகே பாசிங்காபுரத்தைச் சேர்ந்த கண்ணன் (50) என்பதும், கடன் தொல்லையால் தீக்குளித்ததும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.