1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 10 அக்டோபர் 2023 (11:02 IST)

மகன் கிடைக்காததால் தந்தையை வெட்டிக் கொன்ற கும்பல்! – அம்பத்தூரில் அதிர்ச்சி!

அம்பத்தூரில் முன் விரோதம் காரணமாக மகனை கொல்ல வந்தவர்கள் மகன் கிடைக்காததால் தந்தையை வெட்டிக் கொன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



சென்னை அம்பத்தூரில் உள்ள சண்முகபுரம் பகுதியை சேர்ந்தவர் ஆட்டோ ஓட்டுனரான மேக்ஸ்வெல். 53 வயதான மேக்ஸ்வெலுக்கு 3 மகன்கள் உள்ளனர். அதில் முதல் மகன் மோசஸ் கடந்த சில ஆண்டுகள் முன்னதாக உதயா என்பவரது கொலை வழக்கில் தொடர்புடையதாக கைது செய்யப்பட்டு பின் விடுதலை செய்யப்பட்டு கார் ஓட்டுனராக பணியாற்றி வருகிறார்.

நேற்று மோசஸ் கார் ஓட்ட சென்றிருந்த நிலையில் மேக்ஸ்வெல் மது அருந்தி விட்டு வீட்டில் படுத்து தூங்கிக் கொண்டிருந்துள்ளார். அப்போது வீட்டிற்குள் ஆயுதங்கள் சகிதம் நுழைந்த மர்ம கும்பல் மேக்ஸ்வெலை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பியுள்ளனர். மேக்ஸ்வெலின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பார்த்தபோது மேக்ஸ்வெல் சம்பவ இடத்தில் ரத்த வெள்ளத்தில் பலியாகி கிடந்துள்ளார்.

இதுகுறித்து தகவலறிந்த போலீஸார் சம்பவ இடம் விரைந்து மேக்ஸ்வெல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்,. முதற்கட்ட விசாரணையில் மோசஸை கொல்வதற்காக வந்த கும்பல் அவர் இல்லாததால் மேக்ஸ்வெலை வெட்டி விட்டு தப்பியதாக தெரிய வந்துள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Edit by Prasanth.K