வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Updated : புதன், 5 பிப்ரவரி 2020 (22:00 IST)

தலைமை ஆசிரியர்களாக பொறுப்பு வகித்த 3 மாணவர்கள்...

தலைமையாசிரியர்

கரூர் அருகே அரசுப் பள்ளியில் வாய்ப்பாடு ஒப்பித்ததால் தலா 1 மணி நேரம் என்று மூன்று மணி நேரம் தலைமை ஆசிரியர்களாக  பொறுப்பு வகித்த 3 மாணவர்கள்.
 
கரூர் மாவட்டம் லிங்கத்தூர் அரசுப் பள்ளியில் வாய்ப்பாடு ஒப்பித்த 3 மாணவ, மாணவிகளுக்கு  தலா ஒரு மணி நேரம் என்று மூன்று மணி நேரம் தலைமை ஆசிரியர்  பொறுப்புகளை  வழங்கி தலைமை ஆசிரியர் கவுரவித்த சம்பவம் தமிழக அளவில் பெரும் சுவாரஸ்யத்தினையும் மாணவர்களிடையே பெரும் வரவேற்பையும் பெற்றுள்ளது.
 
கரூர் மாவட்டம். தாந்தோன்றிமலை ஒன்றியம், லிங்கத்தூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் 25 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனர். பள்ளித் தலைமை ஆசிரியராக கு.பரணிதரன் பணியாற்றி வருகிறார். கடந்த கல்வியாண்டில் மாநில நல்லாசிரியர் விருது பெற்ற இவர்., இப்பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக, 4, 5-ம் வகுப்பு மாணவ, மாணவிகளிடம் 9-வது வாய்ப்பாடு வரை படித்துவந்து, தடையின்றி ஒப்பித்தால், அவர்களுக்கு ஒரு நாள் தலைமை ஆசிரியர் பதவி வழங்கப்படும் என இப்பள்ளியின் தலைமை ஆசிரியர் கு.பரணிதரன்  தெரிவித்திருந்தார். +
 
இந்நிலையில், பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு வாய்ப்பாடு ஒப்பித்தல் போட்டி நடைபெற்றது. இதில் 5-ம் வகுப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் செ.ஜனனி, சு.லோகேஷ், சொ.சத்யப்ரியா ஆகிய 3 பேர் வாய்ப்பாடுகளை தடுமாறாமல் ஒப்பித்தனர். இதையடுத்து, 3 பேருக்கும் தலா ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கினால் பள்ளி நிர்வாக பணிகள் பாதிக்கப்படும் என்பதால், 3 பேருக்கும் தலா ஒரு மணி நேரம் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்க கு.பரணிதரன் முடிவு செய்தார். அதன்படி,  பகல் 12 மணி முதல் 1 மணி வரை செ.ஜனனி, பிற்பகல் 2 மணி முதல் 3 மணி வரை சு.லோகேஷ், பிற்பகல் 3 மணி முதல் 4.10 மணி வரை சொ.சத்யப்ரியா ஆகிய 3 பேர்  தலைமை ஆசிரியர் பொறுப்பு வகித்தனர். அந்த நேரத்தில் தலைமை ஆசிரியர் இருக்கையில் அமர்ந்து மாணவ, மாணவிகளின் குறிப்பேடுகளை ஆய்வு செய்தனர். மாணவர்களை ஊக்கப்படுத்தவும், இனி வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பாடங்களி லிருந்து கேள்விகள் கேட்கப்பட்டு சிறப்பாக பதிலளிக்கும் மாணவ, மாணவிகளுக்கு ஒரு நாள் தலைமை ஆசிரியர் பொறுப்பு வழங்கப்படும் என தலைமை ஆசிரியர் கு.பரணிதரன் தெரிவித்தார். 
 
இது போல, பள்ளி மாணவர்களை ஊக்குவிக்க, பரிசு பொருட்களை கொடுப்பதற்கு பதில், இது போன்ற பதவிகளை கொடுத்தால் அவர்களது ஊக்கம் அதிகரிக்கும் என்றதோடு., இவ்வாறு நாம் செய்தால் தான் மாணவ பருவத்தில் மாணவர்களின் செயல்திறன் அதிகரிக்கும் என்றார். இதே போல, தலைமை ஆசிரியர் பதவி வகித்த செ.ஜனனி தெரிவிக்கும் போது., இது போன்று நான் பள்ளி படிக்கும் போதே, தலைமை ஆசிரியர் பதவியில் அதுவும் நாற்காலியில் அமர்வது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாகவும், இதே போல, படித்து இதே நாற்காலிகள் போல, கலெக்டர் ஆவதுடன் ஏழை, எளியவர்களுக்கு உதவி செய்வதற்காக, நாற்காலியில் அமர்வது இப்போதே உறுதியுடன் தெரிவித்து கொள்கின்றேன் என்றார்.