1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By vinoth
Last Modified: ஞாயிறு, 9 ஜூன் 2024 (07:57 IST)

கங்கனாவை அறைந்த குல்விந்தர் கவுருக்கு தங்க மோதிரம்… திராவிடர் கழகம் அறிவிப்பு!

கடந்த சில நாட்களாக இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது கங்கனா மற்றும் சிஐஎஸ்எஃப் வீரரான குல்விந்தர் கவுருக்கு இடையிலான விவகாரம். நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் இமாச்சலப் பிரதேசம் மண்டி தொகுதியில் போட்டியிட்ட கங்கனா ரனாவத் வெற்றி பெற்று மக்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அவர் சில தினங்களுக்கு முன்னர் சண்டிகர் விமான நிலையத்திற்கு வந்தபோது அவரை சிஐஎஸ்எஃப் காவலர் குல்விந்தர் கவுர் என்பவர் கன்னத்தில் அறைந்துள்ளார். இது சம்மந்தமாக பேசிய குல்விந்தர் “விவசாயிகள் போராட்டத்தில் எல்லோரும் 100 ரூபாய் பணம் வாங்கிக் கொண்டு வந்து உட்கார்ந்திருக்கிறார்கள் என கொச்சையாகப் பேசினார். அதில் என் அம்மாவும் இருந்தார். போராடியவர்களை அவமானப்படுத்தியதால்தான் அவரை அறைந்தேன்” எனக் கூறியிருந்தார்.

இந்நிலையில் குல்விந்தர் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு அவர் கைது செய்யப்பட்டுள்ளார். நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த சர்ச்சை விவகாரத்தில் அந்த பெண்ணுக்கு ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் எழுந்துள்ளன.

இந்நிலையில் தந்தை பெரியார் திராவிடர் கழகம் குல்விந்தர் சிங்குக்கு பெரியார் படம் பொறித்த தங்க நாணயம் பரிசளிப்பதாக அறிவித்துள்ளது. இதுபோல பஞ்சாப் விவசாயிகள் சங்கங்களும் குல்விந்தருக்கு பரிசுகளை அறிவித்து வருகின்றன. முன்னதாக பாலிவுட் பாடகர் விஷால் தத்லானி அவர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டால் அவருக்கான வேலை காத்திருப்பதாக கூறியிருந்தார்.