வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 9 ஜனவரி 2018 (07:44 IST)

தற்காலிக பேருந்து ஓட்டுநரால் விபத்து ஏற்பட்டு 10 பேர் காயம்

தற்காலிக ஓட்டுநரால் இயக்கப்பட்ட திருச்சியிலிருந்து மதுரைக்கு சென்ற அரசுப் பேருந்து, தனியார் கல்லூரி பேருந்து மீது மோதியதில் 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
சம்பள உயர்வு, நிலுவைத் தொகை வழங்குதல் உள்ளிட கோரிக்ககளை நிறைவேற்றக் கோரி தமிழ்நாடு அரசு போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஒரு வாரமாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர் விஜயபாஸ்கர் மற்றும் உயர் நீதிமன்றம், போக்குவரத்து ஊழியர்களை உடனடியாக பணிக்கு திரும்பும் படி எச்சரித்த போதும், போக்குவரத்து ஊழியர்கள் தங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் வரை பணிக்கு திரும்ப முடியாது என அதிரடியாக அறிவித்தனர். இதனால் மக்கள் பெரிதும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

தற்காலிக பேருந்து ஓட்டுநர்களை கொண்டு பேருந்துகள் இயக்கபட்டு வருகின்றன. தற்காலிக பேருந்து ஓட்டுநரால் ஆங்காங்கே விபத்துகள் நடைபெற்ற வண்ணம் உள்ளது. இதனால் மக்கள் பேருந்தில் அச்சத்துடனே பயணம் மேற்கொள்கின்றனர்.
 
இந்நிலையில் திருச்சியிலிருந்து மதுரை செல்லும் அரசுப் பேருந்தை அருப்புக்கோட்டை சேர்ந்த செந்தில் என்ற தற்காலிக ஓட்டுநர் இயக்கி வந்தார். அப்போது மதுரை உத்தங்குடி அருகே தனியார் கல்லூரி பேருந்தை முந்தி செல்ல முயன்றபோது கல்லூரி பேருந்தின் மீது மோதி விபத்து ஏற்பட்டது. 
இதில் அரசுப் பேருந்தின் முன்புறமாக உள்ள கண்ணாடி உடைந்து சேதமடைந்தது. இதில் பயணித்த கல்லூரி மாணவர்கள் மற்றும் அரசுப் பேருந்தில் பயணித்தவர்கள் என 10-க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். விபத்து குறித்து போலீஸார் தற்காலிக ஓட்டுநர் செந்திலிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.