வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 22 மே 2020 (12:00 IST)

நாளை முதல் ஆட்டோக்கள் இயங்கலாம்! – ஆனா இந்த ரூல்ஸ் கட்டாயம்!

தமிழகத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் தளர்வுகள் வழங்கப்பட்டு வரும் நிலையில் தற்போது ஆட்டோக்களை இயக்க தமிழக அரசு அனுமதி அளித்துள்ளது.

தமிழகத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மார்ச் முதல் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கு மே இறுதியுடன் முடிவடைய உள்ளது, இந்நிலையில் நான்காம் கட்ட ஊரடங்கில் தொழில்துறைகள், கடைகள் உள்ளிட்டவை இயங்க அரசு விதிமுறைகளுடன் கூடிய தளர்வை அளித்துள்ளது. இந்நிலையில் ஆட்டோக்களை இயக்க அரசு அனுமதிக்க வேண்டும் என ஆட்டோ ஒட்டுனர்கள் தொடர்ந்து அரசிடம் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில் நாளை முதல் சென்னையை தவிர்த்து பிற மாவட்டங்களில் ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாக்கள் இயங்க தமிழக அரசு நிபந்தனைகளோடு கூடிய அனுமதி அளித்துள்ளது. அதன்படி,

ஆட்டோ ஓட்டுனர்கள், சைக்கிள் ரிக்‌ஷா ஓட்டுனர்கள், அதில் பயணிக்கும் பயணிகள் ஆகிய அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும்.

ஆட்டோக்களில் ஒரு பயணியை மட்டுமே அழைத்து செல்ல வேண்டும். ஒன்றுக்கு மேற்பட்டவர்களை அழைத்து செல்ல கூடாது.

ஆட்டோ மற்றும் சைக்கிள் ரிக்‌ஷாக்களை ஒரு நாளைக்கு மூன்று முறை கிருமி நாசினிகளை கொண்டு சுத்தம் செய்ய வேண்டும்.

நோய் கடுப்பாட்டு பகுதிகளுக்குள் ஆட்டோ மற்றும் ரிக்‌ஷாக்களை இயக்க கூடாது.

பயணிகள் பயன்படுத்தும் வகையில் ஆட்டோக்களில் கிருமி நாசினி, சானிட்டைசர் வைக்க வேண்டும்.

காலை 7 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே ஆட்டோக்களை இயக்க வேண்டும் என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.