1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By J.Durai
Last Modified: வெள்ளி, 31 மே 2024 (11:22 IST)

ஜாமீன் மனுவை திரும்ப பெற்ற சவுக்கு சங்கர்!

பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர் சமீபத்தில் ஒரு யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், பெண் போலீசார் குறித்தும், போலீஸ் அதிகாரிகள் பற்றியும் பாலியல் தொடர்பான அவதூறு கருத்துகளை தெரிவித்து இருந்ததாக பல்வேறு புகார்கள் எழுந்தன.
 
அவர் மீது கோவை சைபர் கிரைம் போலீசார் வழக்குபதிவு செய்து, தேனியில் உள்ள தனியார் விடுதியில் தங்கி இருந்த சவுக்கு சங்கரை கடந்த 4-ந்தேதி அதிகாலையில் கைது செய்தனர். 
 
அவரை கோவை சிறையில் அடைத்தனர்.இதேபோல தேனியில் அவர், தனது உதவியாளர், டிரைவருடன் தங்கியிருந்த விடுதியில் கஞ்சா பதுக்கியதாக பழனிசெட்டிபட்டி போலீசார் வழக்குபதிவு செய்தனர். 
 
அந்த வழக்கில் சவுக்கு சங்கரை கைது செய்து, மதுரை மாவட்ட கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர்.இந்த நிலையில் அந்த வழக்கில் தனக்கு ஜாமின் கேட்டு மதுரை போதை பொருள் தடுப்பு சிறப்பு கோர்ட்டில் சவுக்கு சங்கர் மனு தாக்கல் செய்தார். இந்த மனு ஏற்கனவே விசாரணைக்கு வந்து ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. 
 
இந்த நிலையில் இந்த மனு நீதிபதி செங்கமலச்செல்வன் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது இந்த மனுவை வாபஸ் பெறுவதாக சவுக்கு சங்கர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
 
அதன்பேரில் மனுவை தள்ளுபடி செய்து நீதிபதி உத்தரவிட்டார்.