1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 25 டிசம்பர் 2019 (13:37 IST)

இஸ்லாத்திற்கு மாறும் மக்கள் – உரிய நீதி கிடைக்காததால் முடிவு!

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து மக்கள் இறந்த விபத்தில் உரிய நீதி கிடைக்காததால் மதம் மாறுவதாக தமிழ் புலிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர்.

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த விவகாரம் தமிழகமெங்கும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நீதி கிடைக்க வேண்டும், சுவரின் உரிமையாளர் கைது செய்யப்பட வேண்டும் என்றும் கோரிக்கை வைத்து நாகை திருவள்ளுவன் மற்றும் தமிழ் புலிகள் அமைப்பினர் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.

சுவர் இடிந்த வழக்கில் அதன் உரிமையாளர் சிவசுப்பிரமணியன் கைது செய்யப்பட்டார். பிறகு அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. இதனால் விரக்தியடைந்துள்ள தமிழ் புலிகள் அமைப்பினர் தங்கள் குடும்பத்தினர் 3000 பேரோடு இஸ்லாமிய மதத்துக்கு மாற இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

கோவையில் தீண்டாமை கொடுமைகள் அதிகரித்து வருவதாலும், மக்களுக்கு நீதி சரியாக நிலைநாட்டப்படாததாலும் சுயமரியாதை கருதி மதம் மாறுவதாக தமிழ் புலிகள் இயக்கத்தினர் தெரிவித்துள்ளனர். மேலும் ஜனவரி 5ம் தேதி மதம் மாற இருப்பதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.