வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 5 ஜூலை 2021 (09:02 IST)

டெல்லி கிளம்பும் துரைமுருகன் - அணை பிரச்சனையை தீர்க்க முடிவு!

மேகதாது அணை தொடர்பாக மத்திய ஜலசக்தித்துறை அமைச்சரை சந்தித்துப் பேச அமைச்சர் துரைமுருகன் இன்று டெல்லி பயணம் மேற்கொள்கிறார். 

 
கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது அணை கட்ட கர்நாடக அரசு முயற்சிகள் மேற்கொண்டுள்ளது தமிழகத்தில் பெரும் எதிர்ப்பலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பெற போராடி வரும் நிலையில் புதிய அணையால் தண்ணீர் பங்கீட்டில் மேலும் குளறுபடிகள் எழும் என்ற கருத்து நிலவுகிறது.
 
இதனிடையே, அணைக்கு ஒப்புதல் கேட்டு கர்நாடக முதலைச்சர் எடியூரப்பா எழுதிய கடிதத்துக்கு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மறுப்பு தெரிவித்துவிட்டார். இதனைத்தொடர்ந்து டெல்லியில் தமிழக நீர்பாசனத்துறை அமைச்சர் துரைமுருகன் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் கஜேந்திர செகாவத்தை சந்தித்துப் பேசுகிறார். 
 
இந்த சந்திப்பின் போது மேகதாது அணைக்கு அனுமதி வழங்கக்கூடாது என்ற கருத்தை அவர் வலியுறுத்த உள்ளார். தென்பெண்ணையாற்றின் கிளை நதியான மார்கண்டேய நதியில் கர்நாடகம் அணை கட்டியது குறித்தும் ஆலோசிக்க உள்ளார். மேலும், முல்லைப்பெரியாறு அணை விவகாரம் குறித்தும் மத்திய அமைச்சருடன் விவாதிப்பார் என தெரிகிறது.