1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2023 (13:06 IST)

சேரி மொழி என பேசிய குஷ்புவுக்கு எச்சரிக்கை விடுத்த காங்கிரஸ் எஸ்.சி துறை..!

நடிகை குஷ்பு சமீபத்தில் தனது சமூக வலைதளத்தில் சேரி மொழி என பேசிய நிலையில் சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்சில் அன்பு என்ற பொருள் என்றும் அன்பு என்ற அர்த்தத்தில் தான் பேசினேன் என்றும் விளக்கம் அளித்தார். மேலும் பட்டியல் இன மக்களின் உரிமைகளுக்காக நான் எப்போதும் முன் வந்து நிற்பேன் என்றும் தெரிவித்திருந்தார். 
 
இந்த நிலையில் குஷ்புவின் இந்த விளக்கத்தை ஏற்றுக் கொள்ளாத தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் எஸ்.சி துறை அவருக்கு எச்சரிக்கை விடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது: 
 
“சேரி மொழி என்று பேசி பட்டியலின மக்களை நேரடியாக குஷ்பூ அவமதித்துள்ளார். பாரதிய ஜனதா கட்சியினருக்கே உரித்தான சாதிய மனோபாவத்தை விஷமாக கக்கியிருக்கிறார் குஷ்பூ. தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் என்ற எலும்புத் துண்டுக்காக எப்படி வேண்டுமானால் பேசலாம் என்று நினைக்கிறாரா குஷ்பூ. நீட் தேர்வால் அனிதா தற்கொலை செய்து கொண்டபோது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார்? பாஜகவின் கே.டி. ராகவன் என்ற தலைவர் ஒரு பெண்ணுடன் ஆபாசமாக பேசியபோது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார்? பாஜகவில் மகளிர் நிர்வாகிகள் பாலியல் தாக்குதலுக்கு ஆளானபோது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார்? மணிப்பூரில் பெண்கள் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டபோது இந்த குஷ்பூ எங்கே போயிருந்தார்?
 
சேரி மக்களிடம் ஓட்டு கேட்கும்போது மட்டும் இனித்ததா? மக்களிடம் இருந்து பலத்த எதிர்ப்பு எழுந்த பிறகும் கூட தன் தவறுக்கு மன்னிப்பு கேட்காமல், பூசி மொழுகும் வேலையை செய்ய தொடங்கியிருக்கிறார். சேரி என்ற வார்த்தைக்கு பிரெஞ்ச் மொழியில் அன்பு என்று அர்த்தமாம். அதைத்தான் பயன்படுத்தினாராம். திமுக ஆதரவாளர் ஒருவரின் எக்ஸ் தள பதிவுக்கு பதில் அளித்த குஷ்பு, சேரி மொழி என்று அப்பட்டமாக திட்டினார். அதோடு முதல்வரை சுற்றி இதுபோன்ற முட்டாள்கள் இருக்கிறார்கள் என்றும் குறிப்பிட்டார். இதுதான் அன்பை வெளிப்படுத்தும் சொல்லா? யாரை ஏமாற்ற குஷ்பூ கபட நாடகமாடுகிறார்? இப்போது கூட தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அவருக்கு தோன்றவில்லை.
 
 சேரி மொழி என்று சொல்லி பட்டியலின மக்களை அவமானப்படுத்தும் அளவுக்கு குஷ்பூவுக்கு எங்கிருந்து தைரியம் வந்தது? குஷ்பூவின் தரக்குறைவான பேச்சால் பட்டியலின மக்கள் மனது புண்பட்டுப் போயிருக்கிறது. தமது தவறை திருத்திக் கொண்டு அந்தப் பதிவை உடனடியாக குஷ்பூ நீக்க வேண்டும். அதோடு அவர்  பொது மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையேல், லட்சக்கணக்கான பட்டியலின மக்களை திரட்டி மாபெரும் போராட்டத்தை நடத்த வேண்டிய சூழல் ஏற்படும் என்று எச்சரிக்கிறேன்” என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
 
Edited by Mahendran