வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 21 ஜூன் 2019 (14:20 IST)

இப்போ தண்ணி தருவீங்க எப்போதும் தருவீங்களா? கேரளாவை கேட்கும் எடப்பாடி

20 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில்கள் மூலமாக தமிழகத்திற்கு அனுப்புவதாக கேரளா கூறியுள்ள நிலையில் “தினமும் 20 லட்சம் லிட்டர் தருவீர்களா?” என கேட்டு கடிதம் எழுதப்போவதாக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் தலைவிரித்தாடும் தண்ணீர் பிரச்சினையை தீர்ப்பது குறித்து கலந்தாலோசிக்க இன்று தமிழக சட்டசபை கூடியது. அதில் பேசிய முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி “ தமிழகத்தில் தண்ணீர் பிரச்சினையை போக்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. அடுத்த 4 மாதத்திற்கு தொடர்ந்து தண்ணீர் விநியோகம் செய்யவேண்டியுள்ளது. நிலத்தடி நீர்மட்டம், நீர்நிலைகளில் உள்ள தண்ணீர் இருப்பை கணக்கிட்டே தண்ணீர் விநியோகிக்கப்பட்டு வருகிறது” என அவர் தெரிவித்தார்.

மேலும் அவர் “சென்னைக்கு ஒரு நாளைக்கு 10 லட்சம் லிட்டர் குடிநீர் விநியோகிக்கப்படுகிறது. ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்போர் 10 லாரி தண்ணீர் கேட்டால் என்ன செய்வது?” என்று கேள்வியெழுப்பினார்.

அமைச்சர்கள் வீட்டுக்கு மட்டும் தனியாக தண்ணீர் சப்ளை செய்யப்படுவதாக கூறப்பட்ட புகாருக்கு மறுப்பு தெரிவித்த எடப்பாடி பழனிசாமி “அமைச்சர்களின் குடும்பத்துக்காக தனியாக தண்ணீர் லாரிகள் அனுப்பப்படுவது இல்லை. அமைச்சரை சந்திக்க வருவோர், பத்திரிக்கையாளர்கள் பயன்பாட்டிற்காகதான் தினசரி தண்ணீர் வழங்கப்படுகிறது. இது வழக்கமான ஒன்றுதான்” என குறிப்பிட்டுள்ளார்.

கேரளா தண்ணீர் தருவதாக கூறியது குறித்து பேசிய அவர் “கேரளா 20 லட்சம் லிட்டர் தண்ணீர் அளிக்க முன்வந்ததை வரவேற்கிறோம். அதேசமயம் தினமும் 20 லட்சம் லிட்டர் தண்ணீர் தருவார்களா? என கேட்டு கடிதம் எழுதப்படும்” எனவும் அவர் தெரிவித்தார்.