வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வெள்ளி, 11 ஜனவரி 2019 (13:18 IST)

மீண்டும் தலைதூக்கும் கந்து வட்டிக்கொடுமை – பெண் தற்கொலை முயற்சி…

சிவகங்கை மாவட்டத்தில் கந்து வட்டிக் கொடுமையால் ஒரு பெண் தற்கொலைக்கு முயன்று உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சைப் பெற்று வருகிறார்.

சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே லாடனேந்தலைச் சேர்ந்தவர் செந்தில்குமார். இவரது மனைவி மாரீஸ்வரி. இவர்களுக்கு இரு மகள்களும் ஒரு மகனும் உள்ளனர். செந்தில்குமாரும் அவரது மனைவியும் மூத்தமகள் திருமணத்திற்காகவும் பிற குடும்ப செலவுகளுக்காகவும் அதே ஊரைச் சேர்ந்த பன்னீர் செல்வம் மற்றும் இன்னும் சிலரிடம் வட்டிக்குக் கடன் வாங்கியுள்ளனர்.

வாங்கியப் பணத்திற்கு இதுநாள் வரை அசலை விட அதிகமாக வட்டிக் கட்டி வந்துள்ளனர். சிலக் காரணங்களால் கொஞ்ச காலமாக வட்டிக் கட்ட முடியாமல் இருந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த கந்துவட்டிக் காரர் பன்னீர் செல்வம் செந்தில் குமார் வீட்டிற்கு சென்று அவர்களைத் தகாத வார்த்தைகளால் திட்டியது மட்டுமல்லாம்ல் விஷம் குடித்து சாகும்படியும் கத்தி உள்ளார்.

இதனால் மனமுடைந்த செந்தில்குமாரின் மனைவி மாரீஸ்வரி எலி மருந்தைத் தின்று தற்கொலைக்கு முயன்றுள்ளார். சாவதற்கு முன்பாக தனது தற்கொலைக்குக் காரணம் கந்து வட்டிக்காரர் பன்னீர் செல்வம்தான் என தனது மொபைலில் வீடியோ பதிவு செய்து உள்ளார். அதை ஆதாரமாகக் கொண்டு காவல் நிலையத்தில் அவரது மகள் புகார் அளித்துள்ளார். ஆனால் காவல்துறையினர் இன்னும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.

உயிருக்கு ஆபத்தான நிலையில் மாரீஸ்வரி மதுரை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைப் பெற்று வருகிறார். சில மாதங்களுக்கு முன்பாக கந்து வட்டிக் கொடுமை தாங்க முடியாமல் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கணவன், மனைவி இரண்டு பேரும் தங்களது குழந்தையோடு தீ வைத்துக் கொளுத்தி தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை அடுத்து தற்போது மீண்டும் கந்து வட்டிக் கொடுமையால் ஒரு விபரீதம் நடந்துள்ளது பொதுமக்கள் இடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.