வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 27 ஜூலை 2020 (16:39 IST)

சாத்தான்குளம் மரணம்: ஜெயராஜ் மகளுக்கு அரசு பணி!

சாத்தான்குளம் ஜெயராஜ் மகளுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை வழங்கினார் முதல்வர். 
 
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி   இன்று  தலைமைச் செயலகத்தில், தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு கருணை அடிப்படையில் பணிநியமன ஆணையினை வழங்கிடும் வகையில் ஜெயராஜ் அவர்களின் மகள் திருமதி பெர்சிஸ் அவர்களுக்கு இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை  வழங்கினார். 
 
தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் சம்பவத்தில் உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் பென்னிக்ஸ்  ஆகியோரின் குடும்பத்திற்கு  தலா 10 லட்சம் ரூபாய்  முதலமைச்சர் நிவாரண நிதியிலிருந்து வழங்கிடவும், அக்குடும்பத்தில் அரசின் விதிமுறைகளுக்குட்பட்டு தகுதிக்கேற்ப ஒருவருக்கு அரசு வேலை வழங்கிடவும்  தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 24.6.2020 அன்று உத்தரவிட்டார். 
 
அதன்படி, உயிரிழந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபாய்க்கான காசோலையை   செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் திரு.கடம்பூர் ராஜூ  அவர்கள் 26.6.2020 அன்று வழங்கினார். அதனைத் தொடர்ந்து, குடும்பத்தின் வாரிசுதாரரான திருமதி பெர்சிஸ் அவர்களுக்கு கருணை அடிப்படையில் இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கான பணிநியமன ஆணையினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று வழங்கினார்.
 
இந்த நிகழ்வின்போது,  செய்தி மற்றும் விளம்பரத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ, ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.பி. சண்முகநாதன், தலைமைச் செயலாளர் திரு.க. சண்முகம், இ.ஆ.ப., பொதுத்துறை முதன்மைச் செயலாளர் முனைவர் ப. செந்தில் குமார், இ.ஆ.ப., தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., மற்றும் ஜெயராஜ் குடும்பத்தினர் உடனிருந்தனர்.