புதன், 18 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : சனி, 24 ஆகஸ்ட் 2024 (11:03 IST)

ரூ. 5,570 கோடி கோவில் நிலங்கள் மீட்பு.! முத்தமிழ் முருகன் மாநாட்டை துவக்கி வைத்து முதல்வர் பேச்சு.!

MK Stalin
ரூ. 5,570 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்றும் சாதனைகளுக்கு மகுடமாக பழனி முத்தமிழ் மாநாடு நடைபெறுகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பழநியில் அனைத்துலக முத்தமிழ் முருகன் மாநாட்டை வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்தார். தொடர்ந்து பேசிய  அவர்,  முத்தமிழ் முருகன் மாநாட்டிற்கு சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்தார். கோவிலில் குடியிருக்கும் ஒருவர் அறநிலையத்துறை அமைச்சராக கிடைத்துள்ளார் என்றும் பக்தர்கள் உட்பட அனைவரும் விரும்பும் ஆட்சியை தி.மு.க. வழங்கி வருகிறது என்றும் முதல்வர் பெருமிதம் தெரிவித்தார்.
 
அறுபடை வீடுகளில் ரூ 689 கோடி மதிப்பில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்று அவர் கூறினார். 69 முருகன் கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்றும் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 1,355 கோவில்களில் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டுள்ளது என்றும் முதல்வர் தெரிவித்தார். 

பழநியில் தைப்பூசம், பங்குனி உத்திரத்திற்கு பாதயாத்திரை வரும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார். எல்லா கோவில்களிலும் கட்டணம் இல்லாமல் முடி காணிக்கை செலுத்தும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றும் முருகன் கோவில்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கி பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகிறது என்றும் முதல்வர் ஸ்டாலின் தெரிவித்தார்.

 
அறநிலையத்துறையை அரசு சிறப்பாக நடத்தி வருகிறது என்று குறிப்பிட்ட முதல்வர், கோவில்களில் தினக்கூலி தொழிலாளர்களாக இருந்தவர்களுக்கு பணி நிரந்தரம் வழங்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். ரூ. 5,570 கோடி மதிப்பிலான கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்பில் இருந்து மீட்கப்பட்டுள்ளன என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டார்.