1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 20 ஜூன் 2019 (14:05 IST)

என் பொண்டாட்டிகிட்ட இருந்து என்னை காப்பாத்துங்க – போலீஸிடம் கதறி அழுத ரவுடி

சென்னையில் மனைவியின் அடி தாங்க முடியாமல் கதறிய படி போலீஸ் ஸ்டேசனுக்குள் தஞ்சம் புகுந்த ரவுடியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

நெசப்பாக்கத்தில் உள்ள எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் கார்த்திக். அந்த பகுதியில் பிரபல ரவுடியான இவர்மீது அடிதடி, கொள்ளை வழக்குகள் பல உள்ளன. இதனால் அடிக்கடி இவர் காவல் நிலையம் சென்று வருவது வாடிக்கையாக இருந்துள்ளது.

மேலும் அந்த பகுதியில் ஏதாவது திருட்டு அல்லது வழிப்பறி சம்பவங்கள் நடந்தால் உடனடியாக போலீஸார் கார்த்திக்கை சந்தேகத்தின் பேரில் விசாரணைக்கு அழைத்து செல்வதும், அடிக்கடி கார்த்தியை தேடி வீட்டிற்கு வருவதும் தொடர்ந்துள்ளது.

அடிக்கடி இப்படி போலீஸ் வீட்டிற்கு வருவது கார்த்தியின் மனைவி சுமித்ராவுக்கு அவமானமாக இருந்துள்ளது. இது குறித்து தம்பதிகள் இடையே அடிக்கடி வாக்குவாதம் நடந்துள்ளது.

நேற்று இரவு இருவருக்குமிடையே விவாதம் முற்றியுள்ளது. ஆத்திரமடைந்த சுமித்ரா கார்த்திக்கை அடித்து துவைத்துள்ளார். மது போதையில் இருந்த கார்த்திக் வலி தாங்க முடியாமல் அலறியுள்ளார். அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கதினர் ஓடி வந்து பார்த்திருக்கிறார்கள். சட்டை கிழிந்த நிலையில் உடலில் ரத்த காயங்களோடு வீட்டை விட்டு வெளியேறி ஓடியிருக்கிறார் கார்த்திக்.

ஓடியவர் நேராக அசோக் நகர் காவல் நிலையத்துக்கே ஓடி விட்டார். “என் பொண்டாட்டிகிட்ட இருந்து என்னை காப்பாத்துங்க.. அவளை புடிச்சி ஜெயில்ல போடுங்க” என கதறியுள்ளார். போலீஸ் என்னவென்று விசாரிப்பதற்குள் பிளேடை எடுத்து கழுத்தை அறுத்து கொண்டுள்ளார்.

உடனடியாக அவரை அருகிலுள்ள மருத்துவமனையில் கொண்டு சேர்த்தனர் போலீஸார். விசாரணையில் தான் திருந்தி வாழ்ந்து கொண்டிருப்பதாகவும், ஆனாலும் இரண்டு போலீஸார் அடிக்கடி வீட்டிற்கே வந்து தன்னை அடித்து உதைப்பதாகவும் கார்த்திக் தெரிவித்துள்ளார். அந்த பிரச்சினை பற்றி மனைவியுடம் பேசும்போதுதான் பிரச்சினை அடிதடியாகி விட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பிரபல ரவுடியே மனைவிக்கு பயந்து போலீஸில் தஞ்சம் அடைந்த சம்பவம் அப்பகுதியில் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.