வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 19 ஜூன் 2019 (15:56 IST)

கரண்ட் பில் கட்டாத அமைச்சர் ஜெயக்குமார், டிடிவி தினகரன் – மின்சார வாரியம் அதிரடி சோதனை

சென்னை ராயபுரம் மின்சார வாரியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் மின் கட்டணம் கட்டாமல் ஏமாற்றியவர்கள் குறித்த சோதனையில் அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் டிடிவி தினகரன் ஆகியோர் மின்கட்டணம் கட்டாமல் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது.

சென்னையில் உள்ள ராயபுரம் பகுதியில் சட்டத்துக்கு புறம்பாக பலர் மின்சாரத்தை பயன்படுத்துவதாகவும், பலர் பயன்படுத்திய மின்சாரத்திற்கு உரிய தொகையை செலுத்தாமல் ஏமாற்றி வருவதாகவும் புகார்கள் இருந்தது. ராயபுரம் மின்வாரிய அலுவலகத்தில் புதிதாக இணைந்த மதிப்பீட்டு அலுவலர் இந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுத்தார்.

அதன்படி ஒவ்வொரு பகுதியிலும் மின்சாரத்தை உபயோகித்துவிட்டு அதற்கு உரிய கட்டணத்தை கட்டாதவர்கள் பட்டியலை தயார் செய்தனர். இந்த பட்டியலில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் மற்றும் ஆர்.கே.நகர் எம்.எல்.ஏ டிடிவி தினகரன் ஆகியோர் பெயரும் இடம்பெற்றுள்ளது. இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள சட்டமன்ற உறுப்பினர் கட்டிடத்துக்கான மின்கட்டணத்தை பல மாதங்களாக கட்டாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இதனால் மின் கட்டணத்தை பிணைய தொகையுடன் கட்டும்படி மின்சார வாரியம் அவர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இதுபோலவே பல இடங்களில் நகராட்சி கட்டிடங்கள், அம்மா உணவகங்கள் போன்றவற்றில் மின்சார கட்டணம் கட்டாமல் இருப்பதாகவும் மின்சார வாரியம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.