1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : புதன், 26 ஜனவரி 2022 (13:37 IST)

கச்சத்தீவில் தேசிய கொடி ஏற்ற போராட்டம் - 50 பேர் கைது!

கச்சத்தீவில் தேசியக் கொடி ஏற்றுவதாக சென்ற 50க்கும் மேற்பட்டவர்கள் ராமேஸ்வரத்தில் கைது செய்யப்பட்டனர்.

 
இந்திய குடியரசு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தலைநகர் டெல்லி, தமிழக தலைநகர் சென்னை உள்ளிட்ட அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் கொண்டாட்டங்கள் களைகட்டியுள்ளன.
 
இந்திய மீனவர்கள் கச்சத்தீவு பகுதியில் மீன்பிடிக்கும் உரிமையை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, குடியரசு தின நாளான இன்று சிவசேனா கட்சி மாநில துணை தலைவர் போஸ் தலைமையில் ராமேஸ்வரத்தில் கச்சத்தீவு மீட்கும் போராட்டடம் நடைபெற்றது.
 
ராமேஸ்வரம் - திட்டக்குடி சந்திப்பில் இருந்து 50க்கும் மேற்பட்ட சிவசேனா கட்சியை சேர்ந்தவர்கள் பேரணியாக, அக்னி தீர்த்த கடற்கரை வழியாக கச்சத்தீவு செல்ல முயன்றனர். அவர்களை காவல்துறையினர் கடலில் இறங்க விடாமல் தடுத்து, நிறுத்தினர். இதனால், தேசிய கொடியுடன் கச்சத்தீவைத் திரும்பப் பெற வேண்டும், தமிழக மீனவர்கள் பாரம்பரிய இடத்தில் மீன்பிடிக்க வழிவகை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோஷங்களை எழுப்பினர். இதனைத் தொடர்ந்து ஆர்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.