வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வியாழன், 24 செப்டம்பர் 2020 (08:25 IST)

தமிழ் மீது பற்றுக்கொண்ட பிரதமர் இதை செய்யணும்! – ராமதாஸ் வலியுறுத்தல்!

குஜராத்தில் தமிழ் பள்ளி மூடப்படுவதற்கு வருத்தம் தெரிவித்துள்ள பாமக நிறுவனர் ராமதாஸ், பிரதமர் மோடி இந்த விவகாரத்தில் தலையிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்.

குஜராத் மாநிலம் மணிநகர் பகுதியில் கடந்த பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆமதாபாத் தமிழ் பள்ளி மாணவர்கள் சேர்க்கை குறைந்ததால் மூடுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வி நடத்தி வந்த அந்த பள்ளியை தொடங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பலர் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இதுகுறித்து பேசியுள்ள பாமக நிறுவனர் ராமதாஸ் “குஜராத் ஆமதாபாத்தில் உள்ள தமிழ் பள்ளி மூடப்படுவது வேதனையளிக்கிறது. குஜராத் அரசிடம் தமிழக அரசு பேசி பள்ளி தொடர்ந்து இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழ் பள்ளி உள்ள மணிநகர் தொகுதியில்தான் முன்னர் பிரதமர் மோடி குஜராத் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். தமிழ் மீது பற்றுக்கொண்ட பிரதமர் இந்த விவகாரத்தில் தலையிட்டு தமிழ் பள்ளியை திறக்க வழி செய்ய வேண்டும்” என கேட்டுக்கொண்டுள்ளார்.