செவ்வாய், 2 ஜூலை 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: செவ்வாய், 2 ஜூலை 2024 (12:11 IST)

ராகுல்காந்தி விளம்பரத்துக்காக பண்றார்.. 40 தமிழக எம்.பிக்களும் வேஸ்ட்! – தமிழிசை சௌந்தர்ராஜன் ஆவேசம்!

நாடாளுமன்றத்தில் ராகுல்காந்தி பேசிய விவகாரம் சர்ச்சைக்குள்ளான நிலையில் அவர் விளம்பரத்திற்காக இத்தைகைய பேச்சுகளை பேசுவதாக தமிழிசை சௌந்தர்ராஜன் தெரிவித்துள்ளார்.



நேற்று நடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் எதிர்கட்சி தலைவரான ராகுல்காந்தி, இந்துக்கள் குறித்து பேசியது சர்ச்சைக்குள்ளானது. மேலும் அவர் நீட் குறித்தும், அம்பானி, அதானி பெயர்களை குறிப்பிட்டும் பல்வேறு கருத்துகளை பேசியிருந்தார். இது பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் பாஜக பிரமுகர்கள் பலரும் ராகுல்காந்திக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு தரிசனத்திற்காக சென்ற தமிழிசை சௌந்தர்ராஜன் செய்தியாளர்களை சந்தித்தபோது ராகுல்காந்தியின் பேச்சுக்கு கடும் கண்டனங்களை தெரிவித்துள்ளார்.


இதுகுறித்து பேசிய அவர் “இந்துக்கள் என்றாலே வன்முறையாளர்கள் என இந்துக்களை இழிவாக பேசிய ராகுல்காந்திக்கு எனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன். பாராளுமன்றத்திற்கு என ஒரு நடைமுறை இருக்கின்றது. ராகுல்காந்தி பல பொய்யான குற்றச்சாட்டுகளை முன்வைத்தபோது ஒவ்வொரு மத்திய அமைச்சர்களும் அதற்கு பதில் அளித்தனர்.

ஆனால் நாடாளுமன்றத்தை பார்த்தீர்கள் என்றால் ராகுல்காந்தி விளம்பரம் தேடிக் கொள்ள வேண்டும் என்ற நோக்கில் பேசுகிறார். தமிழ்நாடு, புதுச்சேரியில் இருந்து 40 எம்.பிக்கள் இருந்தும், ராகுல்காந்தியின் இந்துக்கள் குறித்த பேச்சுக்கு வாயை திறக்காமல் வேடிக்கை பார்த்துக் கொண்டு அமர்ந்திருந்தது வேதனை அளிக்கிறது. இவர்களால் தமிழகத்திற்கு எந்த பலனும் இருக்காது” என பேசியுள்ளார்.

Edit by Prasanth.K