1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 7 ஏப்ரல் 2022 (10:23 IST)

'எக்ஸ்இ’ ரக வைரஸ் குறித்த பதற்றம் வேண்டாம் - ராதாகிருஷ்ணன்!

வைரஸ் உருமாறுவது வழக்கமான ஒன்றுதான் எனவே எக்ஸ்இ வகை கொரோனா குறித்து பதற்றமடைய வேண்டாம் என ராதாகிருஷ்ணன் பேட்டி.

 
உலகம் முழுவதும் கொரோனாவின் ஆல்பா, பீட்டா, ஒமிக்ரான் என பல்வேறு வகைகளும் பரவி மக்களை பாதித்து வருகிறது. உலக நாடுகள் பல்வேறு தடுப்பூசிகளை கண்டறிந்து மக்களுக்கு செலுத்தி வந்தாலும் புதிய வகை திரிபுகள் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன.
 
ஒமிக்ரானை விட வேகமாக பரவும் ஒமிக்ரானின் புதிய திரிபான ”எக்ஸ்இ” என்ற தொற்று சமீபத்தில் இங்கிலாந்தில் கண்டறியப்பட்டது. கடந்த ஜனவரி மாத நிலவரப்படி இந்த புதிய வைரஸால் இங்கிலாந்தில் 637 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 
இந்நிலையில் மகாராஷ்டிராவின் மும்பை பகுதியில் “எக்ஸ்இ” வகை கொரோனா கண்டறியப்பட்டதாக மும்பை மாநகராட்சி தெரிவித்திருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. தென் ஆப்பிரிக்காவில் இருந்து வந்த ஆடை அலங்கார நிபுணருக்கு இந்த புதிய வகை வைரஸ் இருப்பதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் இதை மத்திய அரசு மறுத்துள்ளது. 
 
தற்போது உள்ள ஆதாரங்கள் மும்பையில் உறுதி செய்யப்பட்டது ‘எக்ஸ்இ’ ரக வைரஸ் என்பதை நிரூபிக்க போதுமானதாக இல்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மத்திய அரசின் இந்த அறிவிப்பை தொடர்ந்து சென்னையில் மருத்துவத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பேட்டியளித்தார். 
 
அவர் கூறியதாவது, வைரஸ் உருமாறுவது வழக்கமான ஒன்றுதான். எக்ஸ்இ வகை கொரோனா குறித்து பதற்றமடைய வேண்டாம். பாதுகாப்பாக இருக்க வேண்டும். மத்திய அரசு இன்னும் ‘எக்ஸ்இ’ ரக வைரஸ் என்பதை உறுதி செய்யவில்லை எனவும் குறிப்பிட்டார்.