1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Updated : வெள்ளி, 13 செப்டம்பர் 2019 (13:34 IST)

கடவுள் சிலைகள் காட்சி பொருட்கள் அல்ல! – பொன். மாணிக்கவேல் சீற்றம்

ஆஸ்திரேலியாவுக்கு கடத்தப்பட்ட நடராஜர் சிலையை மீட்டு கொண்டுவந்த பொன்.மாணிக்கவேல் “கடவுள் சிலைகள் காட்சி பொருட்கள் அல்ல” என்று தெரிவித்துள்ளார்.

கடந்த சில ஆண்டுகளாக கோவில்களில் சிலை திருடும் கும்பலை குறி வைத்து பிடித்ததுடன், சிலைகளையும் மீட்டு கொண்டு வந்தவர் ஐபிஎஸ் பொன்.மாணிக்கவேல். தற்போது தனது பதவியிலிருந்து ஓய்வு பெற்ற பின்னரும் கூட சிலை கடத்தலை தடுக்க அயராது பாடுப்பட்டு வரும்  பொன்.மாணிக்கவேல், தற்போது 37 ஆண்டுகளுக்கு முன் திருடப்பட்ட நடராஜர் சிலையை ஆஸ்திரேலியா சென்று மீட்டு கொண்டு வந்துள்ளார்.

திருநெல்வேலியில் உள்ள அறம்வளர்த்தநாயகி அம்மன் கோவிலில் இருந்த நடராஜர் சிலை 1982ம் ஆண்டு களவாடப்பட்டது. தற்போது அது ஆஸ்திரேலியாவில் உள்ள அருங்காட்சியகத்தில் இருப்பதை கண்டுபிடித்த பொன். மாணிக்கவேல் அதை தன் குழுவினரோடு சென்று மீட்டு கொண்டு வந்துள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர் சந்திப்பில் பேசிய அவர் ”இன்னும் நிறைய சிலைகள் மீட்கப்பட வேண்டியுள்ளது. அமெரிக்காவில் மட்டும் 100க்கும் மேற்பட்ட சிலைகள் இருக்கின்றன. கடவுள் சிலைகள் காட்சி பொருட்கள் அல்ல. ஆனால் வெளிநாடுகளில் அவை காட்சிப்பொருட்களாக வைக்கப்பட்டிருப்பது வேதனையளிக்கிறது.

இந்த சிலைகளை மீட்க மிகவும் கஷ்டப்பட்டுள்ளோம். ஆஸ்திரேலியாவிலிருந்து டெல்லியில் இறங்கினோம். டெல்லியிலிருந்து சென்னைக்கு விமானத்தில் வர கூட பணம் இல்லாததால் மூன்று நாட்களாக ரயிலிலேயே பயணித்து வந்து சேர்ந்தோம். பாதுகாப்புக்கு கூட யாரும் இல்லை. சிலைகளை மீட்க பயணிக்கும்போதெல்லாம் எனது ஓய்வூதியத்தை பயன்படுத்தியே பயணித்து வருகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.